Friday, November 14, 2008

இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம்

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்ற டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

“விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்” என்பதே.

ஆனால், அவர் 1948-இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார்.

அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்டுநாயக்காவில் பிரித்தானிய விமானப்படைத்தளமும் அமைக்கப்பட்டன.

இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் எதிர்நாடுகளுடன் கூட்டுச்சேரும் போக்கு சிங்களத் தலைவர்களிடம் எப்போதும் உண்டு.

பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக 1970-ஆம் ஆண்டு இந்தோ-பாக்கிஸ்தானிய யுத்தம் வெடித்தபோது அப்போதைய இலங்கைப் பிரதமராயிருந்த திருமதி.சறீமாவோ பண்டாரநாயக்கா பாக்கிஸ்தானிற்கு அனுசரணையாக நடந்து கொண்டார்.

அதாவது, பாக்கிஸ்தானிய இராணுவம் சிவில் உடையில் இலங்கைக்கூடாக விமானப் பயணங்களை மேற்கொள்ள பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா வகை செய்து கொடுத்திருந்தார்.

இந்நிலையில் யுத்தம் முடியும் வரை இலங்கையை இராணுவ ரீதியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பீல்டு மார்ஷல் மனோக்ஷா அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியபோது இந்தியப் பிரதமர் இராஜதந்திர வழிமுறையின் மூலம் இலங்கைப் பிரதமரை அணுகி கொழும்பிற்கூடான பாக்கிஸ்தானிய இராணுவத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினார்.

டி.எஸ்.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். சிறீமாவோ பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்படி இரண்டில் ஒருகட்சிதான் இலங்கையில் மாறி மாறிப் பதவிக்கு வருவதுண்டு.

மேற்படி இரு கட்சிகளும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டினைத்தான் உலகரங்கில் மேற்கொள்கின்றன என்பது ஒரு வரலாற்றுப் போக்காய் உள்ளது.

மேற்படி இரு கட்சிகளுக்கும் அடுத்த பெரும் கட்சியாக இருப்பது ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி.யினர்.

இந்த மூன்றாவது கட்சியாகிய ஜே.வி.பி. மேற்படி இரு பெரும் கட்சிகளையும் விட அதிதீவிர இந்திய எதிர்ப்புவாதம் கொண்ட கட்சியாகும்.

இந்த வகையில் இலங்கைத்தீவில் உள்ள மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் தெளிவாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் அதன்வழி ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதத்தையும் தமது அடிப்படைக் கொள்கைகளாய் பின்பற்றி வருகின்றன.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள ஆட்சியாளரை அணைத்து நடத்த வேண்டும் என்ற கொள்கையை எப்போதும் கொண்டுள்ளனர்.

சிங்கள ஆட்சியாளரை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழரின் நலன்களை பலியிடுவதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு எப்போதும் கவலை இல்லை.

பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கொள்கை வகுப்புக் குழுத் தலைவராக இருந்த ஜி.பார்த்தசாரதி சிங்கள ஆட்சியாளர்களின் கபடத்தனங்களை அதிகம் விளங்கி வைத்திருந்தவர் ஆவார்.

அவரைப் போலவே ஏ.பி.வெங்கடேஸ்வரனும் திறமை மிகக் இராஜதந்திரி ஆவார்.

இதில் முதலாவது சிறந்த இராஜதந்திரியாயிருந்த ஜி.பார்த்தசாரதியை அரங்கிலிருந்து அகற்றுவதில் முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றார்.



ஜி.பார்த்தசாரதி ஒரு தமிழன் என்றும், அவர் தமிழருக்கு சாதகமாகவே பேச்சுவார்த்தையில் நடந்துகொள்வாரென்றும் எனவே அவரை நீக்கினால்தான் தாம் பயனுள்ள முறையில் பேசமுடியும் என்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்திய அரசை வற்புறுத்தியதன் பெயரில் ஜீ.பார்த்தசாரதி 1985-ஆம் ஆண்டு அரங்கைவிட்டு அகற்றப்பட்டார்.

அத்துடன் ஏ.பி.வெங்கடேஸ்வரனும் கொள்கை வகுப்பில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனது வெளியுறவுச் செயலர் பதவியை 1987-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராஜினமா செய்தார்.

மேற்படி இரு பெரும் இராஜதந்திரிகளும் அரங்கத்தில் இல்லாதபோது சிங்கள ஆட்சியாளர்களால் ஏனைய இந்திய இராஜதந்திரிகளை இலகுவில் ஏமாற்றுவது சாத்தியப்பட்டது.

ஈழத்தமிழருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவின் நலனுக்கேற்படும் பாதிப்பாய் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய இராஜதந்திர வட்டாரங்களுக்குள் காணப்படும் உள்முரண்பாட்டை சரிவரக் கையாள்வதில் சிங்கள இராஜதந்திரிகள் கைவந்தவர்கள்.

தொடர்ச்சியறாது 2,300 ஆண்டுகால நிறுவனமான பௌத்த மகாசங்கம் சிங்கள மக்களிடம் உண்டு.

எழுத்தும், அறிவும் கொண்ட பன்மொழிப் புலமைமிக்க, முற்றிலும் அரசியல் மயப்பட்ட ஒரு நிறுவனமாய் பௌத்த மகாசங்கம் உள்ளது.

பழைய வரலாற்று சித்தாந்தத்தினால் வற்றி இறுகிப்போயிருக்கும் இந்த பௌத்த நிறுவனம் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் தமிழின எதிர்ப்பு வாதத்தையும் காவ்விப்பேணி வருகின்றது.

இத்தகைய தொடர்ச்சி குன்றாத நிறுவனத்தினால் அரசமைப்புடன் கூடிய இராஜதந்திர பாரம்பரியம் 2300 ஆண்டுகளுக்கு மேலாய் பேணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் அரசும் பௌத்த மகாசங்கமும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளவை.

இப்பின்னணியில் நோக்குகையில் சிங்கள அரசியல்வாதிகளின் இராஜதந்திரம் மிகவும் மெருகானதாய் இருக்க முடியும்.

பல கட்டங்களில் சிங்கள இராஜதந்திரம் இந்திய இராஜதந்திரத்தை மிகவும் இலகுவாகவே தோற்கடித்துள்ளது.

சிங்கள இராஜதந்திரமானது பலக்கோட்பாடில் நம்பிக்கை கொண்டதல்ல. அது தந்திரோபாயத்திலேயே நம்பிக்கை கொண்டது.

பெரிய இந்தியாவை அது பலத்தால் வெல்லமுடியும் என்று நம்பவில்லை.

தன்னை ஒரு மிகச் சிறிய அரசாக விளங்கிகொண்ட இலங்கை அரசு எப்போதும் தந்திரோபாயத்தின் மீதே தன்னை தக்கவைத்துக்கொண்டது.

இந்திய உபகண்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கதைத்தீவு 69 மடங்கு சிறியதாகும்.

இத்தகைய பிரமாண்டமான இந்தியாவுக்கு கீழ் தென்பகுதியில் உள்ள சிறிய இலங்கைத் தீவானது தன்னை 2,300 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்தியாவின் பிடியிலிருந்து தற்காக்க முடிந்துள்ளது என்பது ஓர் அபூர்வமான உண்மையாகும்.

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் நேரடியாய்ச் சிக்காது ஒரு சிறிய தீவால் 2,300 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடிக்க முடிந்தமை சிங்கள இராஜதந்திரத்தின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சில தற்காலிகமான பின்னடைவுகளுக்கு அநுராதபுர அரசு உட்பட்டிருந்த போதிலும் இறுதியில் சிங்களப பௌத்த அரசு இந்தியாவிற்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்துவதில் இறுதிவெற்றியை இதுவரை ஈட்டியுள்ளது.

இப்படி ஒரு கூட்டுமொத்தக் கணக்கை பார்க்க இந்திய இராஜதந்திரிகள் தவறக்கூடாது. ஈழத்தமிழரைத் தோற்கடித்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்களமாக்கிவிட்டால் இறுதியில் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அந்நிய சக்திகளுடனும் இலகுவாக கூட்டுச்சேரலாம் என்பதே சிங்கள இராஜதந்திரத்தின் நோக்கு நிலையாகும்.

இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சியில் கிழக்கு மாகாணம் வரை பாரிய வெற்றியை இதுவரை சிங்கள அரசு எட்டியுள்ளது.

தன்வாயால் கொள்ளக்கூடிய அளவு சொற்றை உண்பது போல் சிங்கள அரசு நாளும் பொழுதும் படிப்படியாக ஈழத்தமிழரை விழுங்கி வருகின்றது.

கடந்த 60 ஆண்டுகளாக இது விடயத்தில் உறுதியாக கொள்கை நிலைப்பாட்டுடன் சிங்கள அரசு, ஈழத்தமிழரை ஏப்பமிட்டு வருகின்றது.

இப்போக்கை இந்திய அரசு தொடர்ந்தும் அசட்டை செய்யுமேயானால் இறுதியில் இதற்கு முதற்பலியாகப் போவது தமிழகமும் தென்னிந்திய மாநிலங்களுமே.

பதவிக்கு வரும் சிங்கள கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, இந்தியாவுக்கு எதிரான மேற்குலக அரசுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

மற்றைய கட்சியான சுதந்திரக்கட்சி இந்தியாவுக்கு எதிரான ஆசிய நாடுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைக் கொண்டது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அரசாங்கம் இதில் இரண்டாவது வகையாகும்.

குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான இந்தியாவின் அயல்நாடுகளுடன் கூட்டுச்சேர்வதே மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கையாகும். இது மகா ஆபத்தானது.

இலங்கையில் நிகழ்ந்துவரும் இன ஒடுக்குமுறையை வைத்துக்கொண்டு கொழும்பு அரசாங்கத்தை தம் கைக்குள் கொண்டுவர இந்தியாவின் எதிர் அரசுகள் முயன்று வருகின்றன.

இத்தகைய வாய்ப்பான நிலையைப் பயன்படுத்தி சிங்கள இராஜதந்திரிகள் ஒருபுறம் இந்தியாவிடம் தமது பேரம் பேசும் சக்தியை வளர்த்தும் மறுபுறம் இந்தியாவுக்கு அடிப்படைப் பலமான ஈழத்தமிழரை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் நசுக்கியும் வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தில் காணப்படும் அத்தனை வாய்ப்புகளையும் சிங்கள இராஜதந்திரிகள் தமது சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

உதாரணமாகப் பார்க்கையில் “தமிழ்ப் பயங்கரவாதத்தை” வெற்றிகொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளைச் செய்ய மறுக்குமிடத்து தாம் இந்தியாவுக்கு விருப்பமில்லாத நாடுகளிடம் ஆயுதம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு என்று சிங்கள ஆட்சியாளர் கூறி, இந்திய அரசிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்குள்ள கேள்வி என்னவெனில், யாரிடம் இலங்கை இரசு ஆயுதங்களைப் பெற்றால் என்ன அது தமிழரை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்பதேதான். இது விடயத்தில் தனது இறுதி இலக்கை சிங்கள அரசு ஈட்டிக்கொள்கிறது.

மேலும், இலங்கையில் தமிழரை தோற்கடிப்பதன் மூலம் இறுதியிலும் இறுதியாக இந்தியாவை தோற்கடிப்பது என்ற இலக்கை நோக்கி சிங்கள அரசு முன்னேறுகின்றது என்பதே பொருள்.

-மு.திருநாவுக்கரசு

நன்றி: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
ஆர்.36, எம்.எம்.டி.எ. குடியிருப்பு, அரும்பாக்கம், சென்னை-600 105.

0 comments: