Thursday, January 29, 2009

ஈகியர் முத்துக்குமாரின் கடிதம்!

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம்.

வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.

என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?

பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.

சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!

போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.

எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.

எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?

எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?

எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.

அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.

இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...

இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.

1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.

இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

'அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை' என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.

இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும்.

கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

Monday, January 26, 2009

கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும்காணாமல் இருந்தார்

விதியின் சதியா? மதியின் பிழையா?

இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்!

முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் இந்தப் போர் தொடரும். தமிழீழம் கேட்டு எப்போதும்போல அவர்கள் தாக்குதலை நடத்துவார்கள். ஆனால், அது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்குமே தவிர, இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மீண்டும் மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

கடந்த கால் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்கள் போராடிப் போராடி ஓய்ந்து விட்டார்கள். மீண்டும் இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளவும், விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆள் மற்றும் ஆயுதம் அளிக்கவும் அவர்களால் முடியுமா என்பதும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இத்தனை காலமாக விடுதலைப் புலிகளின் பகுதிகளை நெருங்க முடியாத இலங்கை ராணுவம், மிகக் குறுகிய காலத்தில் அதைச் செய்து முடித்ததற்கு முக்கியமான நான்கு காரணங்கள் உண்டு.
இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் குடியேறிய தமிழர்களுக்கும் இடையே இருந்த விரிசலை மிகவும் பெரிதாக்கி, தனக்கு ஆதரவைத் தேடிக்கொண்டது இலங்கை அரசு.
இரண்டாவதாக, கிழக்கு மாகாணத்தில் அரசியல் தீர்வுக்கு கர்னல் கருணாவை இணங்கும்படி செய்ததும் இலங்கை அரசுக்குப் பலமாக அமைந்துவிட்டது.
உலக அளவிலான தீவிரவாதத்துக்கு எதிரான ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது என்பது மூன்றாவது காரணம்.
நான்காவது முக்கியமான காரணம் இந்திய அரசு, இலங்கை அரசுக்குத் தந்த மறைமுக ஒத்துழைப்பு.

இருபத்தைந்து ஆண்டுகளாக நுழைய முடியாத வன்னி காடுகளுக்குள் இலங்கை ராணுவத்தால் நுழைய முடிகிறது என்றால் அது, பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கர்னல் கருணா தந்த தகவல்களின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

"வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒரு கருணா' என்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது.

நாளைய தமிழர் வரலாற்றில், இலங்கைப் பிரச்னையில் ஏற்பட்ட பின்னடைவு பற்றிக் குறிப்பிடும் போது, நிச்சயமாக இந்த வரிகள் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை: "கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும்காணாமல் இருந்தார்'.

ஏனென்றால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தும்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை நிறுத்த முடியாமலும், இந்திய ராணுவத்தின் உதவிகளைத் தடைசெய்ய முடியாமல் விஷயத்தை தள்ளிப்போட்டதற்காகவும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவுக்குரல் கொடுத்தபோதும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் "உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்' என்று திமுகவினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியையும் வரலாறு குற்றம் சுமத்தும்.

மத்திய அரசின் அரசியல் ஆய்வுக் குழுவில் ப. சிதம்பரம், டி.ஆர்.பாலு என்ற இரு தமிழர்கள் இடம்பெற்று இருப்பதால், மத்திய அரசு ஏன் தாமதித்தது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்பதாக முதல்வர் கருணாநிதி சொல்லவே முடியாது.

முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் பிரதமரும் நானும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம் என்று மக்களின் பரிதாபத்தைப் பெறவும் இயலாது.

தமிழ்ச் சாதி பற்றி மகாகவி பாரதியார் எழுப்பிய அதே கேள்விதான் இன்று நமக்கும் எழுகிறது:

""...........................கலியின் வலியை
வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்.
நாசம் கூறும் "நாட்டு வைத்தியர்'
இவராம். இங்கு இவ் இருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழ்ச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா?''


நன்றி: தினமணி

Sunday, January 18, 2009

தமிழகத்தின் எழுச்சியால் “பம்முகிறார்” பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைத் தீவில் உள்ள சிங்கள இனவெறி அரசுகள் அனைத்தும் அந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களை பூண்டோடு அழித்தொழித்துவிட்டு அத்தீவை சிங்களர்களின் தீவாக மாற்றும் நடவடிக்கையை காலங்காலமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தன் இனத்திற்காக தமிழர்களை அழித்தொழிக்கும் பணியை சிங்கள இனத்தின் தற்போதையத் தலைவன் இராசபக்சே தன் பரிவாரங்களுடன் தீவிரமாக செய்து வருகிறான்.

இராசபக்சே செய்துவரும் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்தியாவில் வாழும் தமிழினப் பகைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்திய அரசின் பெயரால் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது ஊரரிந்த இரகசியம்...

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வலியுருத்தி வருகின்றனர்.


ஆனால் தமிழர்களின் குரலை செவி மடுக்காமலும், கோரிக்கைகளையும் வேண்டுகோளையும் குப்பைக்கூடையில் வீசியும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசின் தமிழின விரோத போக்கிற்கு எதிராக தமிழகம் தற்போது புதிய பாய்ச்சலோடு வெகுண்டெழுந்துள்ளது. இந்திய அரசுக்கு எதிராகவும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. இதைக்கண்டு காங்கிரஸ்காரர்கள் தற்போது அச்சமடைய தொடங்கியுள்ளார்கள் என்பது அவர்களின் பேச்சின் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஏ.கே.அந்தோணி அவரது சொந்த மாநிலமான கேரளாவில் சுற்றுப்பயணம் செய்தபோது வருகிறார். அப்போது ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

"சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. இலங்கையில் சில மனிதநேய பணிகளில் மட்டுமே இந்தியா ஈடுபட்டு வருகின்றது. ஒரு உறுதியான அரசியல் தீர்வு மூலமாகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண முடியும்'' என்று பம்முகிறார்...


சிங்கள இராணுவத்திற்கு ரேடார்கள் வழங்குவதும், வங்கக்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் போர்க்கப்பலை நிறுத்தி வைப்பதும், அப்பாவித் தமிழர்களை நாள்தோறும் கொன்றழிக்கும் சரத் பொன்சேகாவை பாராட்டுவதும், ஆயுதங்கள் வாங்க நிதியுதவி செய்வதும், சீருடை அணியாத தொழிற்நுட்ப வல்லுனர்களையும் போர் விமான பைலட்டுகளையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பது மனித நேயப் பணிகளாம்...

தமிழினத்தின் எதிரிகளே!


தமிழின எதிரிகளும் துரோகிகளும் ஒன்று சேர்ந்து குட்டக்குட்ட தமிழன் குணிந்து கொண்டே இருப்பன் என்று மட்டும் கனவு காணாதீர்கள்... நீங்கள் ஒரு இனமாக தோன்றுவதற்கு முன்னரே தன்னுடைய வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய இனம் தமிழினம்.


நிகழ்காலத்திலும் தமிழனத்தின் எதிரிகள் யார் என்றும் தமிழனின் இலக்கு எதுவென்றும் “எங்கள் கிழவன்” எங்களுக்கு பாடம் நடத்திவிட்டு சென்றுள்ளான்.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.

மேலும் இலங்கை தமிழருக்கு அதிக சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஒருபோதும் அவர் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. சிறிலங்கா போர் தளபதி சரத் பொன்சேகா சிறப்பாக செயற்படுகிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

முல்லைத்தீவில் முற்றுகையிடப்பட்டுள்ள சில லட்சம் தமிழர்களை கடல் வழியாகவும், வான்வழியாகவும், தரை வழியாகவும் சிறிலங்கா இராணுவம் தாக்கி வருகிறது.

இது தொடர்பாக நம்முடைய செயலாளர் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏன் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்திடம் அரசிடம் போர் நிறுத்தத்தை தொடர்பாக பேச வேண்டாம் என்று சொல்லி தானே அவரே அனுப்பி வைத்திருக்கிறது. அப்படியென்றால் இந்திய அரசாங்கம், இந்திய தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவமானப்படுத்தி விட்டது என்று தானே அர்த்தம்.

மத்திய அரசின் இந்த கடும் பாதக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள். இது தொடர்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே சமயத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து நாங்கள் பேச இருக்கிறோம்.

முதலமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழருக்காக தியாகம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் என்ன தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

50 ஆண்டுகாலம் முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம். இதுவரை தோற்று வந்ததாக தானே அர்த்தம்.

சரி அதனை விட்டு விடுவோம். இதற்கு முன்பு தி.மு.க. மத்திய அதிகாரத்தில் இல்லை. இப்போது காங்கிரசுக்கு சரி பாதியாக இருக்கிறார்களே? இப்போது ஏன் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் அமைச்சில் தி.மு.க. உள்ளது. அப்படியிருந்தும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தமிழனை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை ஏன் இவர்கள் வற்புறுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் எண்ணம் சிங்கள இராணுவத்திற்கு இல்லை என்றும், விடுதலைப் புலிகள் தான் தமிழ்மக்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றும் ஜெயலலிதா கூறியதாக வரும் தகவல்கள் தொடர்பாக எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறு. ஏனெனில், சிங்கள இராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவிப்பது எல்லோருக்கும் தெரியுமே.

இது தொடர்பாக உண்மை நிலைய அறிய வேண்டுமானால் நடுநிலையாளர்களான 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி, அங்குள்ள நிலைமைகளை கண்டு வர சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடவும் நாங்கள் தயாராகவும் இருக்கிறோம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Sunday, January 11, 2009

தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்!

நமது இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது. இலங்கையில் சிங்கள இனவெறி அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புப் போரை நிறுத்தவேண்டும். இலங்கைத் தீவில் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ தமிழினத்திற்காக “தமிழீழ அரசு” உருவாக குரல் கொடுக்கவேண்டும் -என தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக குரலெழுப்பி போராடி வருகிறார்கள். ஆனால் உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க இந்திய நடுவண் அரசு மறுத்து வருகிறது.

ஈழத்தமிழர்களுக்காக கடந்த ஆறு மாதமாக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் இன்னலை தீர்க்க மனிதநேயத்தோடு இப்பிரச்சனையில் இன்றுவரை இந்திய அரசு ஈடுபடவில்லை என்பதே உண்மை. காரணம் இந்திய அரசு கடைபிடித்து வரும் தவறான வெளியிறவுக் கொள்கையே!

இந்திய அரசு மேற்கொள்ளும் இத்தகைய தவறான போக்கை மாற்ற வேண்டுமென்றால் தமிழகத்தில் போராட்டம் நடத்தி இனி எந்தவித பயனும் இல்லை. “தமிழர்களின் போராட்டக்களம் இனி புது தில்லியாக இருக்கவேண்டும்.”

தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டால் நடுவண் அரசு தன்நிலையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும். தமிழகத்தில் உள்ள இனஉணர்வாளர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் “தமிழீழம்” என்ற இலக்கிற்காக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்.

தமிழினத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்களை தலைவராகக் கருதாமல் ஒரு வீரமிக்க தொண்டராக செயலாற்ற வேண்டும். இதுபோன்ற பணியை மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன், கி.வீரமணி ஆகியோர் ஈடுபட்டுவருவது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

தமிழர்களும் தமிழின உணர்வாளர்களும் இனி தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் ஈடுபடத்தேவையில்லை. நாம் அனைவரும் புதுதில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அது தொடர் போராட்டமாகவும் இருக்கவேண்டும்.

இன உணர்வோடும் எழுச்சியோடும் தமிழின உணர்வாளர்கள் புதுதில்லியை பத்துநாள் முற்றுகையிட்டால் தமிழீழம் தானக பிறக்கும். தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்.

Thursday, January 8, 2009

சென்னையில் இந்திய தேசியக் கொடி எரிப்பு

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க நடுவணரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதற்கும் தமிழர்களை படுகொலை செய்ய சிங்களர்களுக்கு இந்திய அரசு உதவி செய்வதற்கும் கண்டனம் தெரிவித்து இந்திய தேசியக் கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாத்திகம் கேசவன் (வயது 60)என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அவர் இந்தப் போராட்டத்தில் நேற்று (07.01.2009) ஈடுபட்டார். தேசியக் கொடிக்குத் தீ வைத்தபோது அந்தப் பகுதியில் சுற்றுக்காவலில் இருந்த காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துத் தீயை அவித்தனர்.
பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்தல் தடுப்புச் சட்டம் (1971) படி நாத்திகம் கேசவன் மீது வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல் துறையினர் அவரை நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர். நீதிபதி ஆணையின் பேரில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Monday, January 5, 2009

தமிழீழம் மலர்ந்தே தீரும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. விடுதலைக்காக போராடும் இயக்கம் என்றும், நிச்சயம் தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழம் தான் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசிடம் வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் நாங்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக எம்பிக்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்தித்து பேசினோம். எத்தனையோ முறை போரை நிறுத்தத் சொல்லி வற்புறுத்தியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இது 7 கோடி தமிழர்களின் தலைகுனிவு. இதனால் சுயமரியாதை, தன்மானத்தை இழந்து நிற்கிறோம். அடுத்த 15 நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு செல்வதாக தெரியவில்லை என்றார்.

இலங்கை பிரச்சினையில் செவிசாய்க்காத மத்திய அரசிடம் கூட்டணி வைத்துள்ளீர்கள். அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுப்போம். அதில் பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகப்படியான எந்த முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படி நடப்போம் என்றார்.

மேலும் இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு அதிகாரிகளும், மத்திய அமைச்சர்களும் அலட்சியம் செய்கிறார்கள். கிளிநொச்சியை பிடித்துவிட்டோம் என்று கூறும் இலங்கை இராணுவம், கிளிநொச்சியில் எத்தனை விடுதலைப்புலிகள் சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களையும், இந்தியாவின் தொழில் நுட்பத்தையும் வைத்து இலங்கை இராணுவம் போரிட்டு வருகிறது.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் என்று காங்கிரஸ் கூறுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. விடுதலைக்காக போராடும் இயக்கம் என்றார். மேலும் இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ததில்லை. பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளை வளர்த்துள்ளனர் என்றும், நிச்சயம் தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழம் தான் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத்தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?.

தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்வரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றார் ராமதாஸ்.

நன்றி: தமிழ்வின்.காம்