Thursday, August 7, 2008

ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள்

நாத்திகம் இதழின் 50-வது ஆண்டு விழா கடந்த 03.08.2008 அன்று சென்னையில் நடைபெற்றது இவ்விழாவில் மருத்துவர் இராமதாசு பேசியதாவது:

நமது மண், ஆறுகள், குளங்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து வருகிறோம். நமது இளைஞர்கள் மது, திரைப்படங்களால் சீரழிந்து வருகின்றனர்.

இதை எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் நாமும் இல்லை. அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.

இதை மாற்றவில்லையெனில், நமது முன்னோர்கள், தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விடும். இல்லையெனில், தமிழர்களுக்கு விமோசனமே இல்லை.

தமிழகத்தில் 4 தலைமுறைக்கு இளைஞர்கள் பலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஓர் ஆய்வு தெரி விக்கிறது.

தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வறட்டுக் கூச் சலாகத்தான் உள்ளது. சிற்றூர்களில் கூட பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை உள்ளது.

அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில், தமிழ்வழியில் தரமான, கட்டாய, சமச்சீரான கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை முதல் கடலூர் வரை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங்கிக் குவிக்கின்றனர். இந்த மனை விற்பனை தமிழகம் முழுவதும் இனி தொடரும்.

நமது மண், மொழியை மட்டுமன்றி மீனவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதையெல்லாம் மாற்றுவதற்கு வேறு என்ன வழி என்று தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இதற்கான மாற்று வழியை தலைவர்கள் கூறினால் அதை பின்பற்றலாம்.

ஒரு காலத்தில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசிப் பேசி அவர்களின் தொண்டை கூட வறண்டுவிட்டது.
இதற்காகப் போடாத மாநாடுகள் இல்லை.

ஆனால், இன்று ஒரு பள்ளியோ அல்லது மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்றால் கூட தில்லிக்கு தான் கோப்பு களைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநில சுயாட்சி அந்த அளவுக்கு உள்ளது. இதை யோசிக்க வேண்டும்.

எனவே, இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத் துள்ள தலைவர்கள் கூடிப் பேசி வழிகாட்ட வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாசு.

நன்றி: தினமணி, 04.08.2008.

2 comments:

said...

//இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஓர் ஆய்வு தெரி விக்கிறது.//
முதல்ல இவங்க கட்சி நடத்துன மதுவிலக்கு போராட்டத்துக்கு கூட்டிகிட்டு வந்த ஒரு தாய்குலம் தண்ணியடிச்சுச்சே, அதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க.

said...

எந்த மதுவிலக்கு போராட்டத்துல எந்த தாய்குலம் குடிச்சுட்டு வந்தாங்கன்னு எனக்குத் தெரியாது...

மதுவை ஒழிக்க யார் போராடுகிறார்கள் என்பது முக்கியமல்ல...

தமிழன் உருப்பட தமிழ்நாட்டில் மது ஒழிக்கப்பட வேண்டும்.

மதுவை ஒழிக்க எந்தக் கட்சியில் எந்த இயக்கத்தில் இருந்தாலும் ஒவ்வொரு தமிழனும் அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.