Thursday, September 25, 2008

எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை-அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்


நோய்டாவில் தொழிலாளர்களால் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை நிருவாகி அடித்துக் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்காக ஆஸ்கர் பெர்னாண்டசு அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளார்।

இந்த கொலை பற்றி “தொழிலாளர்களின் மனக்குறைதான் அந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், தொழிலாளர்களைக் கடுமையான நிலைக்குத் தள்ளும் நிருவாங்களுக்கு இது ஓர் எச்சரிக்கை” என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் “நிலையான தொழிலாளர்களின் ஊதியத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் இடையே பெரிய பாகுபாடு நிலவுவதாகவும்“ அவர் குறிப்பிட்டிருந்தார்.

“ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு குறைந்த அளவு கூலியைக்கூட ஒப்பந்ததாரர்கள் தருவதில்லை“ என்றும் ஆஸ்கர் பெர்னாண்டசு கூறியிருந்தார்.

இக்கருத்துகளுக்கு இந்தியத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இன்போசிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இச்சிக்கலில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காத நிலையில் “ஏழைத் தொழிலாளர்களுக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை. நான் வருந்துகிறேன்“ என்று கூறியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பல்லக்கு தூக்கவும் அவர்களிடம் தரகுக்கூலி பெறவும் பழக்கப்பட்ட நமது நடுவண் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு இடையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு நடுவண் அமைச்சர் குரல் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்த செயலாகும்.

உலகமயம், தாராளமயம் இவற்றின் தாக்கத்தால் இந்தியாவில் முதலில் பலியானது வேலை வாய்ப்பு உறுதி, நிரந்தர பணி, நிலைத்த வருமானம், குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவைதான். இவற்றிற்காகப் போராடிய பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது இதுபற்றி சிந்திப்பதில்லை.

அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு பதிலாக; முதலாளிகளிடம் “ஒப்பந்தத் தொழிலாளர் சேவை“ வழங்குவதற்காக தற்போது கையேந்தி நிற்கின்றனர்.


இச்சூழலில் நடுவண் அரசு தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டியது தொழிலாளர்களின் கடமையாகும்.

2 comments:

said...

//பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பல்லக்கு தூக்கவும் அவர்களிடம் தரகுக்கூலி பெறவும் பழக்கப்பட்ட நமது நடுவண் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு இடையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு நடுவண் அமைச்சர் குரல் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்த செயலாகும்.//

நடுவண் அரசின் அமைச்சர் தனிமைப் பட்டதற்குக் காரணம், அவர் பேச்சின் தொனி, அன்று நிகழ்ந்த மனிதத் தன்மை அற்ற செயலுக்கு ஆதரவு அளிப்பது போல் இருந்தது தான்.

said...

நிகழ்வுகளை மட்டுமே பார்த்துதான் நாம் நாட்டில் சட்டங்களும், கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை யாரும் அலசி ஆராய்ந்து சரியான தீர்வுகளைக்கான யாரும் முயற்சிப்பதில்லை; அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

வன்முறை செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஒரு முதலாளி பாதிக்கப்பட்டால் துடிதுடிக்கும் ஆட்சியாளர்கள், கொட்டையெழுத்தில் செய்தி வெளியிடும் ஊடகங்கள், பரபரப்படையும் சமூகம்; ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களின் கூக்குரலை கேட்கக்கூட இந்த நாட்டில் நாதியில்லை.