Thursday, October 23, 2008

மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்? - இயக்குநர் சீமான்

சீமானை கைது செய்யவேண்டும் என்று சொன்ன அரசியல் வியாபாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து தன்மான இயக்குநர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 86 சதவீதம் மக்கள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆட்சியையே மக்கள் தீர்மானிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமா பயங்கரவாத இயக்கம் என்றும் தடை செய்யவேண்டும் என்றும் முடிவு செய்வது.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா மக்களை பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

பால்தாக்ரே விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்றார். அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று கண்டித்தது உண்டா? அவர் மேல் ஏன் கோபம் வரவில்லை. அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள். மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்?

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்புஇல்லை, வக்குஇல்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்கு நூறாகி விட்டதா? உடைந்து விட்டதா? சாதாரண இரண்டு பேர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படி ஊறு விளைவிக்க முடியும்.

சிதைக்கப்படும் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர்.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள் மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்பவர்கள் ஏன் கண்டிக்கவில்லை.

இங்கிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு தன் இனத்தை சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று என்றாவது பேசியது உண்டா?

நாங்கள் உண்மையான மனிதநேயவாதிகள் ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை இடித்ததற்காக அழுதோம். அதற்காக ஜார்ஜ் புஷ் பழிவாங்க இருநாடுகள் மீது படையெடுத்து அழிவு ஏற்படுத்தியதற்காகவும் அழுதோம்.

பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதை பார்த்து பேசாமல் மவுனமாக இருக்க முடியவில்லை. மவுனத்தை கலைத்து பேச வேண்டி இருக்கிறது.

எனவே தயவு செய்து தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்கு அழுகிறோம். எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள். நெல்சன் மண்டேலாவை கூட தீவிரவாத பட்டியலில் தான் வைத்துள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ் பெயரை அப்பட்டியலில் இருந்து இப்போது தான் நீக்கியுள்ளனர்.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21 ஆயிரம் பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள். பொறுத்து இருந்து பார்ப்போம். எதுநடக்குமோ அது நன்றாகவே நடக்கும்

1 comments:

Anonymous said...

:)