Sunday, November 16, 2008

மன்மோகன் சிங்கின் அக்கறையின்மையே மகிந்தவின் பேச்சுக்கு காரணம்: தொல்.திருமாவளவன்

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'தாய்மண்' அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'தமிழ் உயிர்' எனும் தலைப்பில் ஓவிய முகாம் நடைபெற்றது.

இதில் ஈழத் தமிழர்களின் சோகம், சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகள் ஆகிய கருப்பொருட்களில் தமிழகத்தின் முன்னணி ஓவியர்களான தட்சணாமூர்த்தி, மருது, புகழேந்தி, வீரசந்தானம், மனோகரன், சந்துரு, பாரதி கல்யாணி போன்ற ஓவியர்கள் கலந்து கொண்டு படங்களை வரைந்தனர்.

இந்த ஓவியங்கள் அடுத்த வாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

ஓவிய முகாமை தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்து உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகும் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. அங்கு போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சவை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசுதான் இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியும்.

தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித்தலைவர்களும் பிரதமரிடம் இதனை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் அவசியம் ஏற்பட்டால் இந்திய இராணுவம் சிறிலங்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

2 comments:

said...

திருமாவை முதலில் காங்கிரஸ், தி மு க கூட்டணியில் இருந்து வெளியே வர சொல்லுங்கள் பார்ப்போம்.

பதவியும் வேண்டும், ஈழத்த் தமிழர் அரசியல் ஓட்டும் வேண்டும். வி.சி ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி விலகலாமே.


குப்பன்_யாஹூ

said...

ஈழத்தமிழர் இன்னல்கள் என்பது ஓட்டுப்பொறுக்கும் விவகாரம் அல்ல.

இரத்த உறவுகளின் இன்னல்கண்டு இன உணர்வுள்ள ஒவ்வொருவனும் கொதித்தெழுவான்.

அந்த எழுச்சிதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பா.ம.க., பொதுவுடமை கட்சிகள், தமிழ்த்தேசிய அமைப்புகளிடம் உள்ளது.

ஈழத்தமிழரைப் பற்றிப் பேசினால் வாக்குகள் கிடைக்கும் என்றால் அனைத்துக்கட்சிகளும் ஈழத்தமிழரை தாராளமாக ஆதரிக்கலாம்.