Sunday, December 28, 2008

திருவண்ணாமலையை பாதுகாத்த திருவண்ணாமலை மக்கள்

மக்கள் சக்தி மக்கள் சக்தி என்கிறார்களே, அது உண்மையாகவே எப்படிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திவிட்டனர் திருவண்ணாமலை மக்கள்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை எனப்படும் இரண்டு மலைகளையும் இரும்புத் தாது எடுப்பதற்காக வெடிவைத்து தகர்க்கும் திட்ட அனுமதிக்காக டிசம்பர் 27-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில்தான் இந்த மக்கள் சக்தி வெளிப்பட்டது.

மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த மலைகள் உள்ளன. இந்த இரு மலைகளிலும் 41 சதவீதம் அளவுக்கு இரும்புத் தாது இருப்பது உண்மையே. தமிழ்நாடு இரும்புத் தாது கனிமக் கழகம், தொழில்வளர்ச்சிக் கழகம், ஜே.எஸ். டபிள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த இரு மலைகளையும் தகர்த்து இரும்புத் தாது பெறும் திட்டத்துக்கு அரசுக்கு கருத்துரு கொடுத்துள்ளன.

இந்த இரு மலைகளில் வேடியப்பன் மலையும் இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. மலையில் உள்ள வேடியப்பன் கோயிலின் மூலிகைத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தவிர, மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையை ஆன்மிக உணர்வுடன் மாதம்தோறும் சுமார் 5 லட்சம் பேர் கிரிவலம் வருகின்றனர்.

கிரிவலம் வருபவர்களின் வசதிக்காக மலையையொட்டி இன்னொரு சுற்றுப்பாதை அமைத்தால், கிரிவலப் பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டபோது, "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்று அனுமதி மறுத்த வனத்துறைதான் இப்போது இந்த இரு மலைகளிலும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும் 2 லட்சம் மரங்களை வெட்டவும் அனுமதிக்கிறது. இது எப்படி?

இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் 9.2 கோடி டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும்; மலையை தொடர்ந்து வெடிகள் வைத்து தகர்ப்பதும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களைக் கொண்டு செல்ல தொடர்ந்து லாரிகள் இயக்கப்படுவதும் திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை மோசமானதாக்கிவிடும் என்பது நிச்சயம்.

தமிழக மக்களின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவண்ணாமலை கோயிலை "பாரம்பரிய நகரமாக' அறிவிக்கச் செய்து, அந்த நகரத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த நகரின் சூழலை அடியோடு அழிக்கத் துணை நிற்பது எதனாலோ?

திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுமார் 800 பேர் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில் அங்கே இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்-எம்பி, எம்எல்ஏ-க்கள்- யாருமே இல்லை. திமுக பிரதிநிதிகள் கட்சிப் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் பாமக-1, காங்கிரஸ்-3, அதிமுக-1 எம்எல்ஏ-க்களும் இந்தக் கருத்துக்கேட்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த மாவட்ட மண்ணின் மைந்தரான உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு (தண்டராம்பட்டு), முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திருவண்ணாமலை) திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு தெரியாமல் இந்தத் திட்டம் கருத்துக்கேட்பு வரை வந்துவிட்டது என்றால், யாரால் நம்ப முடியும்? அவர்கள் நினைத்திருந்தால் அரசுத் துறை அளவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?

“இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன” என்று ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலர் சமாதானம் செய்தபோது ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: “நீங்க அம்பாசமுத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா? ”

அவள் ரத்தம் கொதிக்கிறது; ஏனென்றால், அவளால் வேறு நகரத்துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது; தன் பிள்ளைக்கு பெரியபடிப்பு கொடுத்து, வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ “செட்டில்” ஆகிவிட முடியாது; அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப் போகிறவள் என்பதால்தான் அந்தத் துடிப்பு.

நன்றி: தினமணி 29.12.2008

Thursday, December 18, 2008

தினகரன் நாளேட்டின் தலைப்புச் செய்தியில் நாட்டின் அதி முக்கிய நிகழ்வு

இன்றைய (18.12.2008) நாளேடுகள் அனைத்திலும் “தினகரன்” நாளேடு தவிர நாட்டுக்கு முக்கியமில்லாத செய்திகளே தலைப்புச் செய்தியாக வந்துள்ளது.

“தினகரன்” நாளேடு தவிர பிற நாளேடுகள் நாட்டு மக்களைப் பற்றியோ குறிப்பாக தமிழர்களை பற்றியோ பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன. “தினகரன்” நாளேடு இன்று வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி;


ரஜினிகாந்த-ஐஸ்வர்யாராய் நடிக்கும் “எந்திரன்” படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்

ஷங்கர் இயக்கத்தில் உலக தரத்தில் உருவாகிறது.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் அடுத்த ஆண்டு வெளிவருகிறது
.

(இந்நிகழ்வு தொடர்பான செய்திகளுக்கும் படங்களுக்கும் மூன்று பக்கங்கள் இந்நாளேட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சன் நெட்வொர்க்கின் அனைத்து ஊடங்களிலும் இன்று இதுதான் தலைப்புச் செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.)

பிற நாளேடுகள் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற தலைப்புச் செய்திகள்:

தினத் தந்தி

“தீவிரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைக்கு 2 மசோதாக்கள்
பாராளுமன்றத்தில் நிறைவேறியது”

“மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு“

“சிங்கள ராணுவத்துக்கு பலத்த உயிர் சேதம்”

தினமணி

“மாநில அரசுகளின் உரிமைகளில் என்.ஐ.ஏ தலையிடாது”
“2 மசோதக்களை தாக்கல் செய்து சிதம்பரம் உறுதிமொழி”

தினமலர்

“பொடா சட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சட்டம்”
அமைச்சர் சிதம்பரம் விளக்கம்

“புதிய சட்டத்திற்கு பா.ஜ., ஆதரவு
காலதாமதம் என்று குற்றச்சாட்டு”


தமிழ் ஓசை, ஜனசக்தி, தீக்கதிர், விடுதலை போன்ற உதவாக்கரை நாளேடுகளிலும் இதே கதைதான்.

முரசொலி - கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றில் தலைப்புச் செய்தி என்னவென்று தெரியவில்லை.

.... !!! ... ???

நாள்தோரும் “தினகரன்” நாளேடு படித்தும்
சன் குழமத்தின் தொலைக்காட்சிகளைப் பார்த்தும்
அவர்களை மட்டும் வாழவைத்து...
தமிழக மக்கள் அனைவரும்
மேலும்... மேலும்..
நாசமாய் போக என் வாழ்த்துக்கள்!

-காட்டுமோட்டான்

Tuesday, December 16, 2008

கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.

இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியாவிட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

ஆ. ராசாவுக்குப் பதிலாக உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்'

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா (நன்றி: தினமணி 16.12.2008)

இதென்ன கோயில் பிரசாதமா?

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

Thursday, December 11, 2008

கொள்கைக்காக பதவியை துறந்தவர் வி.பி.சிங்-திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திறப்பு விழாவும், வீரவணக்க கூட்டமும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கொள்கைக்காகவே தன்னுடைய பதவியை துறந்தவர். கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் அறிக்கைகளை அமல்படுத்த முயற்சி செய்த போது, அப்போதைய பெரும்பான்மையாக இருந்த பா.ஜ.க, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் வி.பி.சிங் பதவி இழக்க நேரிட்டது.

தன்னுடைய பதவி பறிபோன போதிலும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த போராடியவர் வி.பி.சிங். ராஜவம்சத்தில் பிறந்தவர் வி.பி.சிங். அப்படி ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோரின் கொள்கைகளை படித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடியவர்.

ஜனநாயக கொள்கைகளை நடைமுறைப்படுத்த சிறிது காலம் அரசியலை விட்டே விலகி இருந்தவர். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்டோருக்காக ஜனநாயக முறையில் குரல் கொடுத்தவர் வி.பி.சிங்.

சமூகத்தில் தகதியற்றவர்களாக கருதப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் நீதிக்காக போராடியதால் அவரை சமூகநிதி காவலர் என்று அழைக்கிறோம்.

Thursday, December 4, 2008

சென்னையில் தமிழர்களே வாழவில்லையா?

தகவல் தொழிற்நுட்பமும் இணையதள சேவைகளும் உலகெங்கும் பரவியிருக்கும் இக்காலத்தில் உலகில் உள்ள அனைத்து நிர்வாக அமைப்பு முறைகளும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளன.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியும் அதனுடைய செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுதல், சமூதாயக்கூடங்களை பதிவு செய்தல், விண்ணப்பங்களை பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை இணைதளம் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. http://www.chennaicorporation.gov.in/

மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காத்துக்கிடப்பது இதனால் தவிர்க்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை சென்னை மாநகராட்சி செய்துவருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சியை பாராட்டுகிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனியும் வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழர்களே வாழவில்லையா? என்ற ஐயமும் இதனால் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளுவதற்காக தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியாம் தமிழை புறக்கணிப்பதும் அதுபற்றி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு செயல்படுவதும் வேதனையளிக்கிறது.



சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம், தமிழனின் தலைநகரம், தமிழர்கள்தான் அங்கு வாழ்கிறார்கள், தமிழர்கள்தான் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியை புறக்கணிப்பதற்கான காரணம் என்ன?

இன்றைக்கு தகவல் தொழிற்நுட்பத்துறையில் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது என்பதும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் கணினி தொடர்புடைய அனைவரும் அறிந்ததே!

தமிழ்நாடு அரசும் பல துறைகளின் சேவைகளை இணையத்தின் வழியாக தமிழ் மொழியிலேயே வழங்கிவருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் வழியாக வழங்கும் செய்தி, தகவல்கள், மாநகராட்சியின் செயல்பாடுகள், இணையவழிச் சேவைகள், துறை செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், மண்டல விவரங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கும் விவரங்கள், படத்தொகுப்பு, அனுமதி பெற்ற நில அளவீட்டாளர்கள் விவரம், மாநகராட்சி திட்டமிடுதல் போன்ற அனைத்து விவரங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

சென்னை மாநகராட்சி என்ற பெயர், ஒரு திருக்குறள், நகர தந்தை (மேயர்) பற்றிய விவரம், நிதிநிலை அறிக்கை, விண்ணப்பங்கள் போன்ற ஒருசில விவரங்கள் மட்டுமே தமிழில் உள்ளன. இவைகளும் நேரடியாக தமிழில் இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட படியிலிருந்து ஒளிபடி (Scanning) எடுத்து இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

சென்ன மாநகராட்சியின் இணையதளம் முழுமையாக தமிழல் இல்லாததற்கு யார் காரணம்?

ஆட்சியாளர்களா? அதிகாரிகளா? தொழிற்நுட்ப வல்லுனர்களா?

சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் மாடியில் “தமிழ் வாழ்க” என்று விளம்பரப் பலகை வைத்துவிட்டால் தமிழ் வாழ்ந்துவிடாது.

இதுபோல தமிழ்நாடு அரசின் பல்வேறு இணையதளங்கள் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.


நமது அண்டை நாடான சீனா தன்னுடைய அனைத்து நிர்வாக நடைமுறைகளையும் அந்நாட்டின் சீன மொழி மற்றும் நான்கு உள்ளூர் மொழிகளில் செயல்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி சீன நாட்டின் செயல் திட்டங்களையும், செய்திகளையும், சீன மக்களின் கலை பண்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 48 உலக மொழிகளில் இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று.




அதுமட்டுமின்றி தமிழின் வழியாக சீன மொழியை பயிற்றுவிக்கும் திட்டமும் அதில் உள்ளது. சீனா இன்று உலகம் முழுவதும் மிடுக்கோடு நடைபோடுவதற்கு காரணம் என்னவென்று இப்போதாவது நமது இந்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும்.

சீன மக்கள் தன்னையும் தன் மொழியையும் உணர்ந்து செயல்பட்டு உலகுக்கு தான் யார்? என்று நிறுபித்து தன்மானத்தோடு வாழ்கிறார்கள்.

சீன மொழியைப் போன்று மிகத் தொண்மையான மொழியை உடைய தமிழன் தன்மானத்தோடு உலகில் வெற்றிநடைபோட தமிழ்நாடு அரசு தமிழை அரியணை ஏற்றுமா?

ஆப்பம் பங்கிட கழுகு வந்துள்ளது-எச்சரிக்கை!

மும்பையில் தற்போது நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப்பிறகு இந்தியா-பாகிசுதானுக்கிடையே பஞ்சாயத்து செய்ய அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அதன் தொடர் நடவடிக்கை பற்றி சிறு கண்ணோட்டம்.


முதலில் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கடுங்கண்டனம் தெரிவிக்கிறார்.


வருங்கால அதிபர் பாகிசுதானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழிக்கலாம் என்கிறார்.



அதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து இந்தியாவிற்கு அனுசரணையாக பேசுகிறார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் கூட்டு இராணுவ தளபதி பாகிசுதானின் இராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார்.

பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாகிசுதான் சென்று அந்த நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் கூட்டு இராணுவ தளபதி இங்கே வந்து இங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்கர்கள் பாகிசுதானிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும் இந்தியாவிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் விளங்கவில்லை.

நமது ஊர்களில் நடக்கும் வாரச்சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கும் தரகர்களுக்கு என்ன வருமானம் வருகிறது என்பது விற்பவருக்கும் தெரியாது, வாங்குபவருக்கும் தெரியாது. அது தரகருக்கு மட்டுமே தெரியும். அதுபோல அமெரிக்காவிற்கு கிடைக்கும் பலன் என்னவென்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.



இந்தியாவிற்கும் பாகிசுதானிற்கும் இடையே கனண்று கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையை அமெரிக்கா தற்போது செய்து வருகிறது என்பது ஊரரிந்த இரகசியம்.
இதை இந்தியாவும் பாகிசுதானும் உணர்ந்து தக்க நடவடிக்கை எடுப்பது இரு நாட்டுக்கும் நல்லது. இல்லையென்றால் பூனைகளுக்கு குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதையாகிவிடும். எச்சரிக்கை!

Sunday, November 23, 2008

கருணாநிதியை தோற்கடித்த மகிந்த: கொழும்பு வார ஏடுகள் புகழாரம்

தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அந்த வார ஏடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்த ராஜபக்ச கடந்த 17 ஆம் நாள் தனது 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் அவருக்கு இரண்டு மகிழ்ச்சியான தகவல்களை கொண்டிருந்தன. ஒன்று பூநகரி பிரதேசத்தை படையினர் கைப்பற்றியது. இரண்டாவது தமிழ்நாட்டின் அழுத்தத்தை முறியடித்தது. போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறும், வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் தமிழக மக்களும் முதல்வர் கருணாநிதியும் மேற்கொண்ட அழுத்தங்களை மகிந்த வெற்றிகரமாக தோற்கடித்து போரை தொடர்ந்து மேற்கொண்டு வருவது தென்பகுதி ஊடகங்களில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெற்று வரும் போருக்கு இந்திய மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதால் உற்சாகம் அடைந்த மகிந்த விடுதலைப் புலிகளை சரணடையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார் என அந்த ஏடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஆட்சி புரியும் இந்திய மத்திய அரசின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தமிழகம் ஏறத்தாழ 39 உறுப்பினர்களை கொண்டுள்ள போதும் அதன் வலிமையை புறந்தள்ளி சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது பெரும் ஆச்சரியமானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: புதினம்.காம்

Friday, November 21, 2008

மறந்தது ஏன்? மன்னித்தது ஏன்?

தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.



அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

மானமுள்ள தமிழர்களுக்கு உள்ள ஐயம் என்னவென்றால்; இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

Tuesday, November 18, 2008

சிங்களப் பேரினவாத நாடான சிறிலங்கா எப்போதுமே இந்தியாவின் நேச நாடாக இருந்ததில்லை-மருத்துவர் இராமதாசு

விடுதலைச் சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை சென்னை மன்றோ சிலை அருகில் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி தொடக்கி வைத்தார்.
அண்ணாசாலை வழியாக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற இப்போராட்டத்தை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முடித்து வைத்தார்.
பேரணியின் முடிவில் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.


இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முதன் முதலில் போராட்டம் நடத்தியது பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான் என்பதை நினைவுகூர்ந்த மருத்துவர் இராமதாஸ், அதன்பிறகே இச்சிக்கல் தீவிரமடைந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் போரை நிறுத்த ராஜபக்ச அரசு மறுத்து விட்டதை மருத்துவர் இராமதாஸ் கடுமையாகக் கண்டித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணியைச் சந்தித்து “போரை நிறுத்த சிறிலங்கா அரசு தயாராக இல்லை” என்று சிறிலங்கா அரச தலைவர் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.



112 கோடி மக்களின் பேராளரான மன்மோகன்சிங் சொல்லியும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதனை சிறிலங்கா அரசு மதிக்கவில்லை.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய மாற்று வழி என்ன என்பது குறித்து சில செய்திகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அதனை நாளை மறுநாள் முதல்வர் பார்வைக்கு அனுப்புவோம். இதில் அவர் நல்ல முடிவெடுத்து செயற்பட வேண்டும் என்று இராமதாஸ் கூறினார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லா பிரச்சினையிலும் திருமாவளவனும், நானும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று உறுதியளித்த மருத்துவர் இராமதாஸ், இச்சிக்கலில் மற்ற கட்சிகளும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அடுத்து என்ன என்பது குறித்து முதல்வர் கலைஞர் தலைமையில்தான் யோசிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அவரின் கருத்துரையைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்.
நானும், திருமாவளவனும் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டலாம். அக்கூட்டத்தில் வெடிகுண்டுகளோடு புறப்படலாம் என்றெல்லாம் பேசலாம். பேசுவது சுலபம். ஆனால் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும்.


இலங்கை பிரச்சினையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையை 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் பாராட்டினோம். இப்போது அக்கட்சி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம் முதலமைச்சருக்கு கருத்துரை கூறும் கூட்டமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் தன்னிச்சியாகப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்பதால், இந்தியக் கம்யூனிஸ்ட் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தா.பாண்டியன் கைவிட வேண்டும். வேண்டுமானால் இன்னொரு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தலாம் எனவும் இராமதாஸ் கூறினார்.

சிங்களப் பேரினவாத நாடான சிறிலங்கா எப்போதுமே இந்தியாவின் நேச நாடாக இருந்ததில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும்தான் நேச நாடாக சிறிலங்கா கருதுகிறது. நம்மை எதிரியாகத்தான் நினைக்கிறது. அதேநேரத்தில் நம்முடைய தென் பகுதியில் தமிழீழம் உருவானால் அது எந்தக் காலத்திலும் நமக்கு நேச நாடாக இருக்கும்.

எனவே வங்க தேசத்தை உருவாக்க அப்போதைய மேற்கு வங்காள முதல்வர் சித்தார்த்த சங்கரே எப்படி பாடுபட்டாரோ அதுபோன்று நாமும் தமிழ் மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்திவிட்டோம் என்று ராஜபக்ச அரசு கூறுவதெல்லாம் பொய்தான். இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யத் தேவையில்லை. தமிழீழம் உருவானால் அதனை ஏற்பளிப்புச் செய்ய வேண்டும். இதைத்தான் நானும், திருமாவளவனும் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினையில் சில ஊடகங்கள் தங்களைத் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. கருணா போன்ற காட்டிக்கொடுக்கும் இரண்டகர்ளுக்குத் துணை போகக்கூடாது. தமிழக மக்களைப் போல ஊடகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழீழத்தை ஏற்பளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

நன்றி: புதினம்.காம்

Sunday, November 16, 2008

மன்மோகன் சிங்கின் அக்கறையின்மையே மகிந்தவின் பேச்சுக்கு காரணம்: தொல்.திருமாவளவன்

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'தாய்மண்' அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'தமிழ் உயிர்' எனும் தலைப்பில் ஓவிய முகாம் நடைபெற்றது.

இதில் ஈழத் தமிழர்களின் சோகம், சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகள் ஆகிய கருப்பொருட்களில் தமிழகத்தின் முன்னணி ஓவியர்களான தட்சணாமூர்த்தி, மருது, புகழேந்தி, வீரசந்தானம், மனோகரன், சந்துரு, பாரதி கல்யாணி போன்ற ஓவியர்கள் கலந்து கொண்டு படங்களை வரைந்தனர்.

இந்த ஓவியங்கள் அடுத்த வாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

ஓவிய முகாமை தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்து உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகும் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே ராஜபக்சவின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. அங்கு போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சவை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசுதான் இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியும்.

தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித்தலைவர்களும் பிரதமரிடம் இதனை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் அவசியம் ஏற்பட்டால் இந்திய இராணுவம் சிறிலங்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Friday, November 14, 2008

இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம்

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்ற டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

“விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்” என்பதே.

ஆனால், அவர் 1948-இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார்.

அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்டுநாயக்காவில் பிரித்தானிய விமானப்படைத்தளமும் அமைக்கப்பட்டன.

இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் எதிர்நாடுகளுடன் கூட்டுச்சேரும் போக்கு சிங்களத் தலைவர்களிடம் எப்போதும் உண்டு.

பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக 1970-ஆம் ஆண்டு இந்தோ-பாக்கிஸ்தானிய யுத்தம் வெடித்தபோது அப்போதைய இலங்கைப் பிரதமராயிருந்த திருமதி.சறீமாவோ பண்டாரநாயக்கா பாக்கிஸ்தானிற்கு அனுசரணையாக நடந்து கொண்டார்.

அதாவது, பாக்கிஸ்தானிய இராணுவம் சிவில் உடையில் இலங்கைக்கூடாக விமானப் பயணங்களை மேற்கொள்ள பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா வகை செய்து கொடுத்திருந்தார்.

இந்நிலையில் யுத்தம் முடியும் வரை இலங்கையை இராணுவ ரீதியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பீல்டு மார்ஷல் மனோக்ஷா அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியபோது இந்தியப் பிரதமர் இராஜதந்திர வழிமுறையின் மூலம் இலங்கைப் பிரதமரை அணுகி கொழும்பிற்கூடான பாக்கிஸ்தானிய இராணுவத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினார்.

டி.எஸ்.சேனநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். சிறீமாவோ பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்படி இரண்டில் ஒருகட்சிதான் இலங்கையில் மாறி மாறிப் பதவிக்கு வருவதுண்டு.

மேற்படி இரு கட்சிகளும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டினைத்தான் உலகரங்கில் மேற்கொள்கின்றன என்பது ஒரு வரலாற்றுப் போக்காய் உள்ளது.

மேற்படி இரு கட்சிகளுக்கும் அடுத்த பெரும் கட்சியாக இருப்பது ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி.யினர்.

இந்த மூன்றாவது கட்சியாகிய ஜே.வி.பி. மேற்படி இரு பெரும் கட்சிகளையும் விட அதிதீவிர இந்திய எதிர்ப்புவாதம் கொண்ட கட்சியாகும்.

இந்த வகையில் இலங்கைத்தீவில் உள்ள மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் தெளிவாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் அதன்வழி ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதத்தையும் தமது அடிப்படைக் கொள்கைகளாய் பின்பற்றி வருகின்றன.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள ஆட்சியாளரை அணைத்து நடத்த வேண்டும் என்ற கொள்கையை எப்போதும் கொண்டுள்ளனர்.

சிங்கள ஆட்சியாளரை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழரின் நலன்களை பலியிடுவதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு எப்போதும் கவலை இல்லை.

பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கொள்கை வகுப்புக் குழுத் தலைவராக இருந்த ஜி.பார்த்தசாரதி சிங்கள ஆட்சியாளர்களின் கபடத்தனங்களை அதிகம் விளங்கி வைத்திருந்தவர் ஆவார்.

அவரைப் போலவே ஏ.பி.வெங்கடேஸ்வரனும் திறமை மிகக் இராஜதந்திரி ஆவார்.

இதில் முதலாவது சிறந்த இராஜதந்திரியாயிருந்த ஜி.பார்த்தசாரதியை அரங்கிலிருந்து அகற்றுவதில் முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றார்.



ஜி.பார்த்தசாரதி ஒரு தமிழன் என்றும், அவர் தமிழருக்கு சாதகமாகவே பேச்சுவார்த்தையில் நடந்துகொள்வாரென்றும் எனவே அவரை நீக்கினால்தான் தாம் பயனுள்ள முறையில் பேசமுடியும் என்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்திய அரசை வற்புறுத்தியதன் பெயரில் ஜீ.பார்த்தசாரதி 1985-ஆம் ஆண்டு அரங்கைவிட்டு அகற்றப்பட்டார்.

அத்துடன் ஏ.பி.வெங்கடேஸ்வரனும் கொள்கை வகுப்பில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனது வெளியுறவுச் செயலர் பதவியை 1987-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராஜினமா செய்தார்.

மேற்படி இரு பெரும் இராஜதந்திரிகளும் அரங்கத்தில் இல்லாதபோது சிங்கள ஆட்சியாளர்களால் ஏனைய இந்திய இராஜதந்திரிகளை இலகுவில் ஏமாற்றுவது சாத்தியப்பட்டது.

ஈழத்தமிழருக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவின் நலனுக்கேற்படும் பாதிப்பாய் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய இராஜதந்திர வட்டாரங்களுக்குள் காணப்படும் உள்முரண்பாட்டை சரிவரக் கையாள்வதில் சிங்கள இராஜதந்திரிகள் கைவந்தவர்கள்.

தொடர்ச்சியறாது 2,300 ஆண்டுகால நிறுவனமான பௌத்த மகாசங்கம் சிங்கள மக்களிடம் உண்டு.

எழுத்தும், அறிவும் கொண்ட பன்மொழிப் புலமைமிக்க, முற்றிலும் அரசியல் மயப்பட்ட ஒரு நிறுவனமாய் பௌத்த மகாசங்கம் உள்ளது.

பழைய வரலாற்று சித்தாந்தத்தினால் வற்றி இறுகிப்போயிருக்கும் இந்த பௌத்த நிறுவனம் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு வாதத்தையும் தமிழின எதிர்ப்பு வாதத்தையும் காவ்விப்பேணி வருகின்றது.

இத்தகைய தொடர்ச்சி குன்றாத நிறுவனத்தினால் அரசமைப்புடன் கூடிய இராஜதந்திர பாரம்பரியம் 2300 ஆண்டுகளுக்கு மேலாய் பேணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் அரசும் பௌத்த மகாசங்கமும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளவை.

இப்பின்னணியில் நோக்குகையில் சிங்கள அரசியல்வாதிகளின் இராஜதந்திரம் மிகவும் மெருகானதாய் இருக்க முடியும்.

பல கட்டங்களில் சிங்கள இராஜதந்திரம் இந்திய இராஜதந்திரத்தை மிகவும் இலகுவாகவே தோற்கடித்துள்ளது.

சிங்கள இராஜதந்திரமானது பலக்கோட்பாடில் நம்பிக்கை கொண்டதல்ல. அது தந்திரோபாயத்திலேயே நம்பிக்கை கொண்டது.

பெரிய இந்தியாவை அது பலத்தால் வெல்லமுடியும் என்று நம்பவில்லை.

தன்னை ஒரு மிகச் சிறிய அரசாக விளங்கிகொண்ட இலங்கை அரசு எப்போதும் தந்திரோபாயத்தின் மீதே தன்னை தக்கவைத்துக்கொண்டது.

இந்திய உபகண்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கதைத்தீவு 69 மடங்கு சிறியதாகும்.

இத்தகைய பிரமாண்டமான இந்தியாவுக்கு கீழ் தென்பகுதியில் உள்ள சிறிய இலங்கைத் தீவானது தன்னை 2,300 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்தியாவின் பிடியிலிருந்து தற்காக்க முடிந்துள்ளது என்பது ஓர் அபூர்வமான உண்மையாகும்.

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் நேரடியாய்ச் சிக்காது ஒரு சிறிய தீவால் 2,300 ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப்பிடிக்க முடிந்தமை சிங்கள இராஜதந்திரத்தின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சில தற்காலிகமான பின்னடைவுகளுக்கு அநுராதபுர அரசு உட்பட்டிருந்த போதிலும் இறுதியில் சிங்களப பௌத்த அரசு இந்தியாவிற்கு எதிராகத் தன்னை நிலைநிறுத்துவதில் இறுதிவெற்றியை இதுவரை ஈட்டியுள்ளது.

இப்படி ஒரு கூட்டுமொத்தக் கணக்கை பார்க்க இந்திய இராஜதந்திரிகள் தவறக்கூடாது. ஈழத்தமிழரைத் தோற்கடித்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்களமாக்கிவிட்டால் இறுதியில் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அந்நிய சக்திகளுடனும் இலகுவாக கூட்டுச்சேரலாம் என்பதே சிங்கள இராஜதந்திரத்தின் நோக்கு நிலையாகும்.

இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சியில் கிழக்கு மாகாணம் வரை பாரிய வெற்றியை இதுவரை சிங்கள அரசு எட்டியுள்ளது.

தன்வாயால் கொள்ளக்கூடிய அளவு சொற்றை உண்பது போல் சிங்கள அரசு நாளும் பொழுதும் படிப்படியாக ஈழத்தமிழரை விழுங்கி வருகின்றது.

கடந்த 60 ஆண்டுகளாக இது விடயத்தில் உறுதியாக கொள்கை நிலைப்பாட்டுடன் சிங்கள அரசு, ஈழத்தமிழரை ஏப்பமிட்டு வருகின்றது.

இப்போக்கை இந்திய அரசு தொடர்ந்தும் அசட்டை செய்யுமேயானால் இறுதியில் இதற்கு முதற்பலியாகப் போவது தமிழகமும் தென்னிந்திய மாநிலங்களுமே.

பதவிக்கு வரும் சிங்கள கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி, இந்தியாவுக்கு எதிரான மேற்குலக அரசுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

மற்றைய கட்சியான சுதந்திரக்கட்சி இந்தியாவுக்கு எதிரான ஆசிய நாடுகளுடன் கூட்டுச்சேரும் கொள்கையைக் கொண்டது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அரசாங்கம் இதில் இரண்டாவது வகையாகும்.

குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான இந்தியாவின் அயல்நாடுகளுடன் கூட்டுச்சேர்வதே மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கையாகும். இது மகா ஆபத்தானது.

இலங்கையில் நிகழ்ந்துவரும் இன ஒடுக்குமுறையை வைத்துக்கொண்டு கொழும்பு அரசாங்கத்தை தம் கைக்குள் கொண்டுவர இந்தியாவின் எதிர் அரசுகள் முயன்று வருகின்றன.

இத்தகைய வாய்ப்பான நிலையைப் பயன்படுத்தி சிங்கள இராஜதந்திரிகள் ஒருபுறம் இந்தியாவிடம் தமது பேரம் பேசும் சக்தியை வளர்த்தும் மறுபுறம் இந்தியாவுக்கு அடிப்படைப் பலமான ஈழத்தமிழரை நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் நசுக்கியும் வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தில் காணப்படும் அத்தனை வாய்ப்புகளையும் சிங்கள இராஜதந்திரிகள் தமது சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

உதாரணமாகப் பார்க்கையில் “தமிழ்ப் பயங்கரவாதத்தை” வெற்றிகொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளைச் செய்ய மறுக்குமிடத்து தாம் இந்தியாவுக்கு விருப்பமில்லாத நாடுகளிடம் ஆயுதம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு என்று சிங்கள ஆட்சியாளர் கூறி, இந்திய அரசிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்குள்ள கேள்வி என்னவெனில், யாரிடம் இலங்கை இரசு ஆயுதங்களைப் பெற்றால் என்ன அது தமிழரை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்பதேதான். இது விடயத்தில் தனது இறுதி இலக்கை சிங்கள அரசு ஈட்டிக்கொள்கிறது.

மேலும், இலங்கையில் தமிழரை தோற்கடிப்பதன் மூலம் இறுதியிலும் இறுதியாக இந்தியாவை தோற்கடிப்பது என்ற இலக்கை நோக்கி சிங்கள அரசு முன்னேறுகின்றது என்பதே பொருள்.

-மு.திருநாவுக்கரசு

நன்றி: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
ஆர்.36, எம்.எம்.டி.எ. குடியிருப்பு, அரும்பாக்கம், சென்னை-600 105.

Thursday, November 13, 2008

போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இராசபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் இராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை உலகம் உணர வேண்டும்.

இந்தியப் பிரதமரின் வேண்டுகோளையும், தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் மதிக்க அவர் தயாராக இல்லை. அவருக்குப் பின்னணியில் உள்ள இந்தியாவின் எதிரி நாடுகளே அவரது துணிவிற்குக் காரணம்.

இனி இந்தியா என்ன செய்யப் போகிறது? ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? அல்லது உறுதியான நடவடிக்கை எடுத்துப் போரை நிறுத்தப் போகிறதா? என்பதை அறிய தமிழக மக்கள் துடிக்கிறார்கள். விரைந்து செயற்பட இந்திய அரசு தவறினால் தமிழகம் எரிமைலையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்

Saturday, November 8, 2008

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கும் பொதுவுடமை அரசு

நேபாளத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி அளிப்பதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளும் படிப்படியாக அரசுப் பள்ளிகளாக மாற்றப்படும் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கினால் கல்வியின் நடைபெறும் பகல் கொள்ளையை தடுக்கலாம். இந்தியாவில் கல்வித்துறைக்கு ஒதுக்கும் பணத்தை முறையாக பயன்படுத்தினால் இங்கேயும் அனைவருக்கும் நல்ல தரமான இலவச கல்வி வழங்கலாம். கல்வி வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்தியாவில் பொதுவுடமை கட்சியினர் ஆளும் மாநில அரசுகளாவது இதுபற்றி சிந்திக்குமா?

Thursday, October 23, 2008

மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்? - இயக்குநர் சீமான்

சீமானை கைது செய்யவேண்டும் என்று சொன்ன அரசியல் வியாபாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து தன்மான இயக்குநர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. 86 சதவீதம் மக்கள் தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆட்சியையே மக்கள் தீர்மானிக்கிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமா பயங்கரவாத இயக்கம் என்றும் தடை செய்யவேண்டும் என்றும் முடிவு செய்வது.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா மக்களை பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

பால்தாக்ரே விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்றார். அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று கண்டித்தது உண்டா? அவர் மேல் ஏன் கோபம் வரவில்லை. அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள். மக்களே தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொன்ன பிறகு அதை மறுத்து கூற நீங்கள் யார்?

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்புஇல்லை, வக்குஇல்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்கு நூறாகி விட்டதா? உடைந்து விட்டதா? சாதாரண இரண்டு பேர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எப்படி ஊறு விளைவிக்க முடியும்.

சிதைக்கப்படும் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர்.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள் மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்பவர்கள் ஏன் கண்டிக்கவில்லை.

இங்கிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு தன் இனத்தை சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது. மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று என்றாவது பேசியது உண்டா?

நாங்கள் உண்மையான மனிதநேயவாதிகள் ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தை இடித்ததற்காக அழுதோம். அதற்காக ஜார்ஜ் புஷ் பழிவாங்க இருநாடுகள் மீது படையெடுத்து அழிவு ஏற்படுத்தியதற்காகவும் அழுதோம்.

பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதை பார்த்து பேசாமல் மவுனமாக இருக்க முடியவில்லை. மவுனத்தை கலைத்து பேச வேண்டி இருக்கிறது.

எனவே தயவு செய்து தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்கு அழுகிறோம். எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள். நெல்சன் மண்டேலாவை கூட தீவிரவாத பட்டியலில் தான் வைத்துள்ளனர். சுபாஸ்சந்திரபோஸ் பெயரை அப்பட்டியலில் இருந்து இப்போது தான் நீக்கியுள்ளனர்.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21 ஆயிரம் பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. தாயக விடுதலைக்காக போராடும் போராளிகள். பொறுத்து இருந்து பார்ப்போம். எதுநடக்குமோ அது நன்றாகவே நடக்கும்

Tuesday, October 21, 2008

விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல! - மருத்துவர் இராமதாசு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தில்லி சென்று இருக்கிறார். அங்கு அவர் ஊடகவியலாரிடம் கூறியதாவது:

இந்தியா தலையிட வேண்டும்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் நடுவண் அரசு தலையிட வேண்டும்.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி நடுவண் அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிசுதான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ளவேண்டும்.

திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலைலாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது.

தீவிரவாத இயக்கம் அல்ல

இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். இலங்கைக்கு நடுவண் அரசு அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகல்

அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் இலங்கை பிரச்சினையை இந்தியா தீர்க்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் செய்வது என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை ஏற்கிறேன். எங்கள் முதல்-அமைச்சர் இலங்கை பிரச்சினையை ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்து செயல்படுகிறார்.

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதை பின்பற்றுவோம்.

மீனவர் பிரச்சினை

இலங்கை அரசு அரசியல் தீர்வு காண்பதில் விருப்பம் தெரிவிக்க வில்லை. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக இலங்கை அரசு செயல்படுகிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

கச்சத்தீவையும் இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் இராமதாசு கூறினார்.

நன்றி: தினத்தந்தி

Friday, October 17, 2008

தமிழக அரசு பள்ளிக் கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதா?

வாழிடம், உணவு உற்பத்தி, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு போன்றவற்றை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் அது உண்மையான அரசாக இருக்கும்.

இவைகள் முழுமையாகவோ அல்லது பகுதிப் பகுதியாகவோ அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலகி தனியாரிடமோ, முதலாளிகளிடமோ, வியாபாரிகளிடமோ சென்றுவிட்டால் அந்த அரசு மக்களுக்கான அரசாக இருக்கமுடியாது. மாறாக அது முதலாளிகளுக்கான அரசாகவோ, தரகு வியாபாரிகளுக்கான அரசாகவோ மாறிவிடும்.

நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் அரசு அதிகாரத்திற்கு வந்தவர்கள் வியாபாரிகளாக மாறிப்போனதாலும், அரசு அதிகாரத்திற்கு வியாபாரிகள் வந்ததாலும் மேற்குறிப்பிட்ட அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலகிவருகிறது.

குறிப்பாக; ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நல்ல குடிமக்களையும் நல்ல எதிர்காலத்தையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறையாகும்.

அதில் உயர்கல்வித்துறை என்பது இன்று பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

பள்ளிக் கல்வியும் இன்று நிலவணிகத்திற்கு அடுத்தபடியாக நல்ல இலாபம் தரும் தொழிலாக மாறிவருகிறது.

இதனால் கல்வியைப் பற்றி எந்தப் புரிதலுமே இல்லதவர்கள் இலாபத்தை மட்டுமே இலக்காக்கொண்டவர்கள் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இப்படி வர்த்தகத்திற்காக தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகளில் வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து தற்குறி தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்பள்ளிகளை நோக்கி ஓடுவதற்கு முக்கிய காரணம் பள்ளிகளின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை, இடவசதி போன்றவையே.

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைஎளிய மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் 70 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். இப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து அரசு உண்மையாக சிந்தித்து செயல்படுகிறதா? என்பதே இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி.

நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைதான் என்ன என்பதை இன்றுவரை எந்த அரசும் தெளிவுபடுத்தாது,

சமச்சீர் கல்வி முறையை இதுவரை செயல்படுத்தாது,

தமிழ்நாட்டில் கல்வி மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதை இன்றுவரை தீர்மானிக்காதது,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புதியதாக எந்த ஒரு அரசுப் பள்ளியையும் தொடங்காமல், ஏற்கனவே இருக்கின்ற பல அரசுப்பள்ளிகளை தொடர்ந்து இழுத்து மூடுவது போன்ற செயல்கள் போன்றவை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் அனைத்தையும் முழுமையாக இழுத்து மூடும் திட்டம் அரசுக்கு உள்ளதா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்; இன்று (17.10.2008) தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.அப்துல்மசீத்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கும்போது பள்ளிக் கல்வித்துறை எதற்காக உள்ளது யாருக்காக செயல்படுகிறது? என்றம் ஐயம் எழுத்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்,

“தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் பொதுத் தேர்வுகளில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு, தொடக்கக் கல்வியில் தமிழக அரசு கவனம் செலுத்தத் தவறியதே காரணம்.

கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டக் கல்விப் பணிகள் குறித்து, கடலூரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தொடக்கக் கல்வியில் பின்தங்கிய நிலையைச் சுட்டிக் காட்டி, அதுவே 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி சதம் குறைந்ததற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். இதை நாங்கள் முன்பே கூறி வருகிறோம்.

கடந்த ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 623 திறன்களை அடைய வேண்டிய மாணவர்கள், 17 திறன்களை மட்டுமே அடைந்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பின்னடைவுக்குக் காரணம்,

அரசு ஆரம்பப் பள்ளிகளில், 5 ஆயிரம் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் ஆக்கப்பட்டுவிட்டன.

மாணவர்கள் இருந்தும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

95 தொடக்கப் பள்ளிகளுக்கு 5 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

1005 நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

108 பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லாமல், பக்கத்துப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

தொடக்கக் கல்விக்கு மாநில அரசு ரூ.4800 கோடியும், மத்திய அரசு ரூ.4800 கோடியும் செலவிடுவதாகக் கூறுகின்றன. ஆனால் முறையாகச் செலவிடப்படுகிறதா?

தொடக்கப் பள்ளிகளுக்கு குறைந்தது 3 ஆசிரியர்களாவது நியமிக்க வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:30 ஆகக் குறைக்க வேண்டும்.

6-ம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் பேச, எழுதத் திறன் வரும் வகையில், கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் திறமை வாய்ந்தவர்களால் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரி, ஓராண்டில் 13 போராட்டங்களை நடத்திவிட்டோம். பயன் இல்லை.

எனவே நவம்பர் மாதம் மீண்டும் போராட்டம் தொடங்குகிறோம். நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை, தமிழக முதல்வருக்கு 10 ஆயிரம் தந்திகள் அனுப்புவோம்.

15 முதல் 19-ம் தேதி வரை கிராமங்களில் நடைப்பயணம் மேற்கொள்வோம்.

20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம்.”

என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்கட்சியினரோ, மாற்றுக் கருத்து கொண்டவர்களோ ஏதாவது அறிக்கை விடுத்தாலோ கோரிக்கை வைத்தாலோ அவர்களுக்கு உடனே பதில்சொல்லும் தமிழக அரசு. இது போன்ற அறிக்கைகளுக்கு பதில்சொல்வதே கிடையாது. இதுபோன்ற நாட்டுக்குத் தேவையான மிக முக்கியமான அறிக்கைகளை மக்களும் படிக்கமாட்டார்கள். அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதே இதற்குக் காரணம்.

இந்தச் சிக்கல் ஏதோ ஒரு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை என்று யாருமே கண்டுகொள்ளாமல் விட்டால் இழப்பு ஆசிரியர்களுக்கு அல்ல; இந்த நாட்டிற்குத்தான்.

மக்களே! நாட்டின் நலன் கருதி “கல்வி வியாபாரமாக மாறுவதை தடுப்போம்! அனைத்துக் கல்வியையும் அரசுடமையாக்குவோம்.”

Monday, October 13, 2008

தமிழ் திரைப்பட கலைஞர்கள் இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலம் நடத்துகிறார்கள்

சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது நடத்தும் இனவெறி தாக்குதலை கண்டித்து அக். 19 அன்று தமிழ் திரைப்பட கலைஞர்கள் சங்கம் இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலம் நடத்துகிறது. இதில் திரைப்படத்துறையைச் சோ்ந்த அனைத்து கலைஞர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இதுபற்றிய ஆலோசனை கூட்டம், சென்னை பிலிம்சேம்பர் கருத்தரங்கு மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. அதில் திரைப்பட தயாரிப்பாளர்கள்ம், இயக்குநர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகசுதர்கள் ஆகிய அனைத்து அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த கூட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன் தலைமை தாங்கினார். `திரைப்பட வர்த்தகத் தலைவர் கே.ஆர்.ஜி. முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராசா கூறுகைளில்,

சிங்கள இராணுவத்தினர் நடத்தி வரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

இந்த பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகமும் குரல் கொடுத்து வருகிறது. திரையுலகை சேர்ந்தவர்கம் சிங்கள இராணுவத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், நேற்று முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்து வருகிறார்கள்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழ் திரையுலகம் சார்பில், வருகிற 19-ந் தேதி இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் நடிகர்-நடிகைகள் உட்பட திரையுலகைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்துகொம்கிறார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* "தமிழ் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், சிங்கள இராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒரு சேர நின்று குரல் கொடுத்து வருகின்றன. அவர்களுடன் கலையுலகமும் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், சிங்கள இராணுவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சிங்கள ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில், திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகசுதர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து, உரத்த குரலில் எங்களின் கண்டனத்தை தெரிவிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

* முதல்கட்டமாக, தமிழர் பகுதியில் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அறிவித்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.

* உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை, பாதிக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும்.

* ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

* தமிழக மீனவர்கம் கடல் எல்லை பகுதியில் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

* இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

* முறையாக ஒரு தூதுக்குழு அமைத்து, இலங்கையில் நடக்கும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

* இலங்கை அரசுக்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வருகிற 18, 19, 20 ஆகிய நாட்களில், தமிழ் திரையுலகில் எல்லா வேலைகளும் நிறுத்தப்படும். படப்பிடிப்பு உட்பட திரைப்பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து தனி ரெயிலிலும், பஸ்களிலும் புறப்பட்டு ராமேசுவரம் செல்கிறோம். 19-ந் தேதி, இராமேசுவரத்தில் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெறும்.

இராமேசுவரம் கடலோரத்தில் நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில், திரையுலகம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கும். அந்த குரல், இலங்கைக்கு எட்ட வேண்டும். மத்திய அரசுக்கும் எட்ட வேண்டும்.''

Tuesday, October 7, 2008

குழப்பமும் வேண்டாம்! குழப்பவும் வேண்டாம்!-தமிழீழமே தீர்வு

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் இன்று ஈழத்தமிழர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

தாய்த்தமிழக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழகத்தில் சூழல் நிலவுகிறது.

இந்தச்சூழலை பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பாகவும் நிரந்தர தீர்வுகாண தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும்.

ஈழச்சிக்கலுக்கு நிரந்த தீர்வு “தமிழீழ தனிநாடுதான்“ என்பது இங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கடந்தகால நிகழ்கால நிலைப்பாடு.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் போன்ற இயக்கங்கள் தமிழீழ சிக்கலுக்கு நிரந்தரத்தீர்வு “தமிழீழ தனி நாடுதான் ஒரே தீர்வு” என்ற நிலைப்பாட்டில் இப்போதும் உள்ளன. திராவிடர் கழகமும் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கும் என நமபுகிறோம்.

எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அ.திமு.க.வின் நிலைப்பாடு தனிநாடுதான் தீர்வு என்றிருந்தார். தற்போது செயலலிதா அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

புதியதாக ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய பொதுவுடமை கட்சியினர் “அனைவருக்கும் சமமான உரிமை வழங்கும் கூட்டாட்சி” மலரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

காங்கிரசு, பா.ச.க. போன்ற கட்சிகளின் தற்போதயை நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் ஈழ பிரச்சனை தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை என்ன என்பதை விளக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் 06.10.2008 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலவரும் தி.மு.க.வின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் பேசும்போது,

......... ............ ....... ........ “இலங்கையில் காந்தியடிகளைப் போன்ற உருவம், ஆனால் பெரியாரை போன்ற உள்ளம் கொண்ட செல்வா தொடங்கியதுதான் உரிமை போராட்டம். அதற்கான ஆதரவு கேட்டு தமிழகத்திற்கு வந்தார். இங்கு வந்த போது அவரோடு அமிர்தலிங்கமும் வந்தார்.

இவர்கள் எல்லாம் இன்று இல்லை. இவர்கள் இல்லாமல் போனதற்கான காரணங்களை நான் ஆராய விரும்பவும் இல்லை. அதற்காக இப்போது கண்ணீர் விட்டு புண்ணியமும் இல்லை.

செல்வா காலத்திற்கு பிறகு அங்கு இளைஞர்கள் தோன்றினார்கள். அந்த இளைஞர்கள்தான் சிறைச்சாலையிலே உயிர்நீத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தியாகம் அவர்கள் நினைத்த விடுதலை உணர்வு இன்றளவும் பட்டுப்போகாமல் இலங்கையில் இருக்கிறது.

ஆனால் முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீர வேண்டுமா? இது விவாதத்திற்குரிய விஷயம். நெடுநாளாக விவாதிக்கப்படுகிறது.” . ......... ......... ........ ........
என்று பேசியுள்ளார்.

கடந்த காலங்களில் தி.மு.க.வின் நிலைப்பாடும் கலைஞரின் நிலைப்பாடும் ஈழத்தமிழர்களின் இன்னல் தீர ஒரே வழி “தமிழீழ தனிநாடு மட்டுமே” என்ற நிலைப்பாடுதான். இந்த நிலைப்பாட்டில் தற்போது குழப்பம் ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

மரியாதைக்குரிய கலைஞர் அவர்களே! வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்துவிடாதீர்கள். தமிழீழ சிக்கலுக்கு “தமிழீழ தனிநாடு” மட்டுமே நிரந்தரத்தீர்வு என்ற இலக்கை நோக்கி மட்டுமே உங்கள் பார்வையை செலுத்துங்கள்... அதற்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுங்கள்... தமிழீழ அதரவு சக்திகள் அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஓரணியில் திரட்டுங்கள்...
“தமிழீழ தனி நாடே” ஒரே தீர்வு என்று தாய்த் தமிழகம் ஒரே குரலாக ஒலிக்கட்டும்...

Friday, October 3, 2008

தமிழ்நாட்டில் மருத்துவர் அன்புமணியைப் பாராட்ட யாருக்கும் மனமில்லை!




காந்தியடிகளின் பிறந்த நாளான கடந்த அக்டோபர் 02 அன்று நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி அவர்கள் நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் நடுவண் அரசில் சுகாதாரத்துறை என்ற ஒன்று இருப்பது நாட்டுமக்களுக்கு பரவலாக தெரிந்தது என்பதே உண்மை.

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் “குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ வசதி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அறிவித்தார்.

அதன்படியே பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவரின் நடவடிக்கைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் அவை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கின.

அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த மருத்துவம் என்ற நிலை நாட்டில் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் அதற்கான பணியை தொடங்கியதற்காக அமைச்சர் மருத்துவர் அன்புமணியை அனைவரும் பாராட்ட வேண்டும்.

இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் மருத்துவர் அன்புமணியின் பணியை உலகமே பாராட்டினாலும் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தவிர்த்து வேறு யாருமே பாராட்டாததுதான்.

அண்மையில் லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்து நாளேடுகளிலும் கொட்டையெழுத்தில் வந்தது. ஒவ்வொரு நாளேடும் ஆய்வின் ஒவ்வொரு கூறுகளையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டன.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 13 நடுவண் அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்ற ஆய்வும் ஆய்வு முடிவும் “தமிழ் ஓசை” நாளிதழ் “மக்கள் தொலைக்காட்சி” தவிர வேறு எந்த ஊடகங்களிலும் துணுக்குச் செய்தியாகக்கூட வெளிவரவில்லை.

காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 நடுவண் அமைச்சர்களில் மிகச்சிறப்பாக செயல்படுவர் மருத்துவர் அன்புமணி என்ற ஆய்வு முடிவுதான்.

ஒரு தமிழன் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்வதை இந்த ஊடகங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? அல்லது ஏற்றுக்கொள்ள மனமில்லையா?

Thursday, October 2, 2008

ஏண்டா! நீங்களெல்லாம் அரசியலுக்கு வந்து தமிழன் தாலிய அருக்கறிங்க?

காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.வீ.தங்கபாலு 02.10.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க சில கட்சிகள் முயல்வதாகவும்,

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவவில்லை என்றும்,

இலங்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் ஆதரிக்கவில்லை என்றும்,

இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.”

தமிழ்நாடு காங்கிரசு கட்சி பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முட்டாள்களின் கைக்கு மாறியதும் அல்லது முட்டாள்களுக்கு மட்டுமே தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிந்ததே.

அந்த வரிசையில் தற்போது கே.வீ.தங்கபாலுவிற்கு அந்தப்பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக நியமிக்கப்படும் வரை ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் தான்உண்டு தன் வேலைஉண்டு என்று கல்வி வியாபாரத்தை மட்டுமே பார்த்துவந்தார்।
தற்போது அவரை தலைவராக நியமித்ததால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டவர்போல் உளரிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் விடுதலைப் புலிகள் வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத்தின் கூட்டுபடை முகாம் மீது நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் இருவர் படுகாயமுற்றதையும் இலங்கையில் 250-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று இலங்கை தூதரக அதிகாரி அறிவித்ததையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இச்செய்தி தமிழக மக்கள் அனைவரும் அறிந்த பழைய செய்தி.

அதுபோல் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக்கொன்றதும் இந்திய அரசு அதை வேடிக்கைப் பார்ப்பதும் தமிழக அரசின் கையாளாகத் தனமும் தமிழர்கள் அறிந்ததே!

திரு. தங்கபாலு அவர்களே! உங்களுக்குத் தெரிந்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். அரசியல் அறிவோ, பொது அறிவோ குறைந்த பட்சம் செய்தித்தாள் அறிவோ இன்றி அரசியல் பேசி தமிழர்களின் தாலியை அருக்காதீர்கள்.

Monday, September 29, 2008

தமிழ்நாட்டில் நடுநிலை நாளேடு என்று எதுவுமில்லை

இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் அனைத்து நாளேடுகளும் தன்னை நடுநிலை நாளேடு என்று அறிவிக்கின்றன. உண்மையில் அப்படித்தான் அந்த நாளேடுகள் செயல்படுகிறதா என்றால்; ஓராயிரம் கேள்விக்குறிகள்தான் மிஞ்சும்.


அந்த வகையில் நாளேடுகள் பற்றி ஒரு கணிப்பு:

தினத் தந்தி் - தமிழ், தமிழர் நலனுக்காக சி.பா.ஆதித்தனார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நாளேடு. இன்று எந்தவொரு கொள்கையும் இன்றி எழுத்துப்பிழையோ, சொற்பிழையோ, கருத்துப்பிழையோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சி செய்தியை அதிகமாக வெளியிட்டு யாரையுமே எப்போதுமே எதிர்க்காமல் தன்னுடைய கல்லாவை கட்டும் சிறந்த நாடார் கடையாக தற்போது மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தமிழ் அல்லாத பல சொற்களை தமிழாக்கிய பெருமை இந்நாளேட்டுக்கு உண்டு.


தின மலர் - நாட்டில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படும் நாளேடு. பகுத்தறிவாளர்களையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் எப்போதுமே எல்லாநிலைகளிலும் எதிர்ப்பது, தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக்கொள்ள அனைத்து மதப்பண்டிகைகளுக்கும் சிறப்பு மலர் வெளியிடுவது, தமிழ்-தமிழர் நலன் பற்றி உண்மையாக சிந்தித்து செயல்படுபவர்களை நையாண்டி செய்வது அல்லது அவர்களுக்கு தேச துரோகிகள் பட்டம் கொடுப்பது, தமிழீழ போராளிகளை எப்போதுமே ஒரு பேட்டை ரௌடிபோல் சித்தரிப்பது போன்றவை இந்த நாளேட்டின் அன்றாடப்பணிகள்.


தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தீபாவளி அன்று நல்லெண்ணை, சீயக்காய் பொட்டலம் வழங்கும் ஒரே நாளேடு. மாடுகூட மேயாத தர்ப்பைப்பில்லை நம் கையில் திணித்து காசு பார்த்த பார்ப்பனக்கூட்டம் “தினமலர்” என்ற பெயரிலே தமிழன் காசிலேயே தமிழனுக்கு நஞ்சு வைக்கிறது.


தினகரன் - கே.பி.கே. குடும்பத்தினரால் நடத்தப்பட்ட தமிழனுக்கு துரோகம் செய்யாத நாளேடு. இன்று மாறன் குடும்பத்திற்கு கைமாறியதும் தன் குலத்தொழிலான தமிழின துரோகத்தை மிகச்சிறப்பாக செய்கிறது. தங்கள் சிக்கலே தமிழர்களின் சிக்கலாக தங்கள் வாழ்வே தமிழர்கள் வாழ்வாக தமுக்கடித்து நடிகர்-நடிகைகளை வைத்து காசு பார்த்து அவர்களை மட்டும் வாழவைக்கும் நாளேடு. நாள் தவறாமல் நடிகைகளின் சதைப்பிண்டங்களை தமிழர்களுக்கு இலவசமாக காட்டும் பணியை மிகச்சிறப்பாக செய்கிறது.


தொடரும்...

Sunday, September 28, 2008

இலங்கைப் பிரச்னை பற்றி பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்-மருத்துவர் இராமதாசு

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியை சிங்கள இனவெறி போர்ப்படை மேற்கொண்டுள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாமல் உள்ளன.

இப்பிரச்னையில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்। இதற்காக அனைத்துக் கட்சித் தலைமைக்கும் முதல்வர் கடிதம் எழுதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்। இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thursday, September 25, 2008

எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை-அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்


நோய்டாவில் தொழிலாளர்களால் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை நிருவாகி அடித்துக் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்காக ஆஸ்கர் பெர்னாண்டசு அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளார்।

இந்த கொலை பற்றி “தொழிலாளர்களின் மனக்குறைதான் அந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், தொழிலாளர்களைக் கடுமையான நிலைக்குத் தள்ளும் நிருவாங்களுக்கு இது ஓர் எச்சரிக்கை” என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் “நிலையான தொழிலாளர்களின் ஊதியத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் இடையே பெரிய பாகுபாடு நிலவுவதாகவும்“ அவர் குறிப்பிட்டிருந்தார்.

“ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு குறைந்த அளவு கூலியைக்கூட ஒப்பந்ததாரர்கள் தருவதில்லை“ என்றும் ஆஸ்கர் பெர்னாண்டசு கூறியிருந்தார்.

இக்கருத்துகளுக்கு இந்தியத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இன்போசிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இச்சிக்கலில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காத நிலையில் “ஏழைத் தொழிலாளர்களுக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை. நான் வருந்துகிறேன்“ என்று கூறியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பல்லக்கு தூக்கவும் அவர்களிடம் தரகுக்கூலி பெறவும் பழக்கப்பட்ட நமது நடுவண் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு இடையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு நடுவண் அமைச்சர் குரல் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்த செயலாகும்.

உலகமயம், தாராளமயம் இவற்றின் தாக்கத்தால் இந்தியாவில் முதலில் பலியானது வேலை வாய்ப்பு உறுதி, நிரந்தர பணி, நிலைத்த வருமானம், குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவைதான். இவற்றிற்காகப் போராடிய பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது இதுபற்றி சிந்திப்பதில்லை.

அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு பதிலாக; முதலாளிகளிடம் “ஒப்பந்தத் தொழிலாளர் சேவை“ வழங்குவதற்காக தற்போது கையேந்தி நிற்கின்றனர்.


இச்சூழலில் நடுவண் அரசு தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டியது தொழிலாளர்களின் கடமையாகும்.

Monday, September 22, 2008

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் கருணாநிதிதான்

தன்னைப்பற்றிய விமர்சனங்களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான்.

முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை.

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்றும் திட்டுவது முதல்வருக்கு அழகல்ல. இந்தப் பட்டங்களை திருப்பி முதல்வர் மீது வீச எத்தனை வினாடி எடுக்கும்?

வைகோவை 18 ஆண்டுகளாக மேலவை உறுப்பினராக்கினேன். அது நான் அவருக்கு போட்ட பிச்சை என்று அன்றொருநாள் முதல்வர் சொன்னார். அப்படி என்றால் தி.மு.க. என்பது ஆண்டிகள் மடமா? முதல்வர் என்ன மூத்த தம்பிரானா? அறிவுடையோர் கேட்கமாட்டார்களா?"

வைகோ புலிகளோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லச் சதி செய்தார் என்று முதல்வர் உளறினாரே? அது நெஞ்சாரச் சொன்ன பொய்தானே? முதல்வர் ஒரு பொய்யன் என்பதுதானே அதன் பொருள்?

நெடுமாறன் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மனம், மொழி இரண்டினாலும் நேசிப்பவர், அவரைப் பார்த்து "வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக்கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!" என்பது கொஞ்சமும் பொருந்தாது. வேண்டு மென்றால் அது முதல்வருக்குத்தான் பொருந்தும்.

முதல்வர்தான் இலாபம் இருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இழப்பென்றால் காததூரம் விலகி ஓடுவது என்ற கொள்கையை வைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நெடுமாறனுக்கு இருக்கும் ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட முதல்வருக்கு இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்!

இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்தீர்கள். கற்களை எறிந்து இந்திரா காந்தியைக் கொல்ல நினைத்தீர்கள். அப்போது இந்திரா காந்தியைக் காப்பாற்றியவர் இன்று நீங்கள் எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சிக்கும் பழ. நெடுமாறன்தானே.

இல்லையா? பின்னர் மானம், வெட்கம், இரண்டையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக" என தட்டை மாற்றி லாலி பாடினீர்களே? இதனை வைத்து முதல்வர் கருணாநிதியை ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றால் அது பிழையாமோ?

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு, "அரசியலில் தீண்டாமை இல்லை" என்று சொல்லிக் கொண்டு அவர்களோடு கை கோர்த்த குத்துக்கரண வீரர் கருணாநிதியா? நெடுமாறனா?

நள்ளிரவில் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை அன்றைய கருணாநிதியைக் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனபோது "அய்யோ என்னைக் கொல்றான்களே" என்று கூக்குரல் விட்டு அழுதீர்களே? அது கோழைத்தனம் இல்லையா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போகாமல் கையெழுத்தைமட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை ஒழுங்காக எடுத்த முதல்வர் வீரத்தைப் பற்றிப் பேசலாமா?

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் முதல்வர்தான்.நெடுமாறன் அல்ல. வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. 23 கோடி செலவில் தீட்டப்பட்ட வீராணம் திட்டத்தில் நடைபெற்றது ஊழலா இல்லையா என்பதற்கு சான்றாக இன்றும் கூட வீராணத்திலிருந்து சென்னை வரை அன்றைக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோராமாகப் பரிதாப மாகக் கிடக்கின்றன. இந்த ஊழலை விசாரித்த சர்க்காரியா ஊழலை விஞ்ஞான முறையில் செய்திருக்கிறார் என முதல் வரை எள்ளி நகையாடினார். தமிழர்கள் கூனிக் குறுகிப் போனார்கள்.

"தமிழகம் நோக்கி தஞ்சம் புகும் ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்" என்று சட்டசபையில் கொட்டி முழக்கினீர்கள். இப்போது யார் யார் வீடுவாங்கி இருக் கிறார்கள். யார் யார் வண்டிவாகனம் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களைக் கைது செய்து வழக்குப் போடுமாறு முதல்வர் தனது காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறாரே? இது இரண்டகம் (துரோகம்) இல்லையா. இதுதான் "மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா?

சிங்களப் படையெடுப்பால் வீடு வாசல் இழந்த தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் ஊர் ஊராகச் சென்று உணவும் உடையும் திரட்டினாரே? தமிழக முதல்வர் என்ன செய்தார்? இன்று கூட தமிழீழம் எதிரி படையெடுப்பால் நெருப்பில் வேகிறது. ஒன்றரை இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து குடிக்கத் தண்ணீர் இன்றி ஒரு நேரக் கஞ்சிக்கு வழியின்றி மரநிழல்களில் வாழ்கிறார்கள்.

உரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னர் போல் கோட்டையில் இருந்துகொண்டு குழல் வாசிக்கின்றாரே? இது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

புறநானூற்று வீரம் என்றால் ஆகா என்று மேடையில் பேசுவது எழுதுவது. அதே வீரத்தை புலிகள் போர்க்களத்தில் செய்து காட்டும் போது "எனக்கு வன்முறை பிடிக்காது" என்று சொல்லும் உங்களை உங்கள் நடையில் கோழை என்று சித்திரிப்பதில் தவறு ஏதாவது இருக்கிறதா?"

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!" - "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ நாளும் மறப்பாரடீ!" என்ற பாரதியின் கவிதை வரிகள் முதல்வருக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறதா இல்லையா?

"உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பாளர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது" என உருசிய ஆட்சித் தலைவர் டிமித்திரி மித்விடெவ் தோள் தட்டினாரே? அவரிடம் இருக்கும் இனப்பற்றில் முதல்வருக்கு நூற்றில் ஒரு விழுக்காடுதானும் உண்டா? நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா?

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் மற்றவர்கள் மீது கல் லெறியக் கூடாது. ஏன் ஆடையையும் களையக்கூடாது! கல்லெறிந்தால் அது தனக்குத்தான் இழப்பு. ஆடை களைந்தால் அது அவருக்குத்தான் வெட்கக்கேடு.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்கு எல்லை இருக்காது. கீழ்க்கண்ட அவ்வையார் பாடலை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்து இப்போது விடை பெறுகிறேன்.

ஆலைப் பலா ஆக்கலாமோ அருஞ்சுணங்கன்வாலை நிமிர்க்க வசமோ - நீலநிறக்காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலாமூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

- நக்கீரன், கனடா.
நன்றி: தென்செய்தி

Wednesday, September 17, 2008

“மிரட்டுகிற வேலை வேண்டாம்” - பழ. நெடுமாறன்-6

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

... ... ... ... ...

என்ன பெரிய வலிமையான அரசாங்கம் இந்த அரசாங்கம்? பதினான்காம் லூயி, ஜார் மன்னர்கள் என்ன ஆனார்கள்? மிரட்டுகிற வேலை வேண்டாம். ஏனென்றால் மிரட்டுவதற்குக் கூட துணிவு கிடையாது. எங்களுக்குத் தெரியும்.

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டான் என்றால் தமிழக மக்கள் இரங்கல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்புவதற்கு கவிதை எழுதுகிறார்கள்.
பிரச்சினையைத் திசைதிருப்புவதை ரொம்ப நாளைக்குச் செய்ய முடியாது. திசை திருப்புவதால் தடம் புரண்டு விடுவார்கள். அவர்களுக்கு நெஞ்சில் உரம் இல்லை.

மக்களை ஒன்று திரட்டவும் மகத்தான மாற்றம் கொண்டு வரவும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் உலகத் தமிழர்களால் முடியும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

முற்றும்

Tuesday, September 16, 2008

“தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது” - பழ. நெடுமாறன்-5

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
... ... ... ...
எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அதன் இனம் கொதித்து எழவேண்டும். கொதிப்பு இல்லாமல் இருந்தால் என்ன பயன்?

இன்றைக்கு இந்த மாநாட்டிலே எனக்கு முன்னாலே பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராசாவும் சிவாஜிலிங்கமும் என்ன சொன்னார்கள்? அவர்கள் பேச்சு நம் நெஞ்சத்தை உலுக்க வில்லையா?
இவ்வளவு கொடுமை நடக்கிற பொழுது நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? என அவர்கள் கேட்டபோது நெஞ்சத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அல்லவா இருக்கிறது? அவர்கள் வேறுயாரிடம் போய் முறையிட முடியும்? நம்மிடம்தான் முறையிட முடியும். நம் பதில் என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டில் எழுச்சி மேலும் அதிகமாக வேண்டும். மேலும் மேலும் அதிகமாக வேண்டும். அச்சத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை மிரட்டி வருகிறார்கள். அச்சமே இல்லை என்பதை நாம் காட்டினால் இந்த ஆட்சி என்பது எங்கே போகும் என்றே தெரியாது. மிரட்டுகிறவர்கள் எங்கே போவார்கள் என்று தெரியாது.

தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது. யாரையும் எதுவும் செய்துவிட முடியாது. நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.

ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு என்று வந்து பார்த்த போது நகரம்-கிராமம் இல்லாமல் மக்கள் எல்லோரும் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்றுதான் கருத்துக் கணிப்பு நிரூபித்தது.

மக்கள் எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடிய அந்த உணர்வு என்பது நீறுபூத்த நெருப்பு போல இருக்கும். ஊதினால் பற்றிக் கொள்ளும். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனந்த விகடனைப் பாராட்டுகிறேன். மக்களை ரொம்ப நாட்கள் யாரும் ஏமாற்ற முடியாது.

புலிகள் புலிகள் என்று கூறிக்கொண்டு திடீர் வேட்டை நடக்கிறது. பொய்யான தகவல்களைத் தருகிறார்கள். தில்லியில் உள்ள எசமானர்கள் இவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். மக்கள் துணிந்து எழுந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.

தொடரும்...

Thursday, September 11, 2008

“வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும்” - பழ. நெடுமாறன்-4

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

... ... ...

1949-ஆம் ஆண்டு செஞ்சீனம் பிறந்தது. பர்மா முதல் - பிலிப்பைன்சு வரை உள்ள தென்கிழக்காசிய நாடுகளில் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள். மலேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும், சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும் சீனர்கள் இருக்கிறார்கள். அப்போது மாசேதுங் சொன்னார்கள். ஆசிய நாடுகளில் வாழக்கூடிய சீனர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இல்லையேல் செஞ்சீனா சும்மா இருக்காது என்றார். எனவே தான் இன்றளவும் சீனர்கள் என்றால் பயப்படுகிறார்கள். தமிழன் என்றால் அப்படிப்பட்ட நிலை இல்லை. வலிமையான செஞ்சீனம் தான் வெளிநாடுகளில் வாழும் சீனர்களைக் காக்கிறது.

வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும். அதுதான் அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு. மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் தமிழர்கள் வலிமையோடு மாறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் நடக்காது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் - நடுவர் குழு தீர்ப்புகள் வந்தால் உடனடியாக கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எப்படி சரியாக இருக்க முடியும்? நம்முடைய வலிமையை நாமே உணரவில்லை.
நாம் எத்தகைய மக்கள்? நம் வலிமை என்ன? நம்மை நாமே உணர வேண்டும். உணர்ந்தாலொழிய வேறு வழியில்லை. மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்க முடியும். யாராவது திசைதிருப்ப நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு சகல பிரச்சினைகளைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டுமென்று சொன்னால் தானாகவே திருந்தி விடுவார்கள்.. எவனும் வாலாட்டத் துணியமாட்டான்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேரை சிங்களப் படை கொல்லும் என்றால் - ஒரு இனம் வாழ்ந்து என்ன? போய் என்ன? நம்முடைய மீனவர்களை நம் கடல் பகுதியிலே வந்து அடிக்கிற துணிவு எப்படி வருகிறது? இந்திய அரசு தலையிடாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. அப்படியானால் தில்லியைப் பணியவைக்க வேண்டுமென்றால் - இப்படியெல்லாம் நடந்தால் தில்லியுடன் மோதுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்காது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்றைக்கு உலக அரங்கில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஓரளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றன என்பதை என்னால் உணரமுடிகிறது. அதை விரைவுபடுத்த நம் கிளர்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும். போராட வேண்டும். எல்லாம் செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து இருபது கல் தொலைவில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் சிறுபான்மை அல்ல. ஆறு கோடி தமிழர்களும் கிளர்ந்து எழுந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க போக்குகளில் முழுமையான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது மாறும். மாறுவதற்கு அதை விரைவு படுத்த வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகளை மேலும் மேலும் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கினால் தான் அந்த மாற்றங்களை விரைவில் கொண்டுவர முடியும்.

தொடரும்...

எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது - பழ. நெடுமாறன்-3

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
... ...
எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது. அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து பாடுபடுகிறது.

இது ஒன்றும் வேடிக்கைக்கான மாநாடு அல்ல. இவ்வளவு பேரை நாம் திரட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான மாநாடு அல்ல. லாரிகளிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சேர்க்கப்பட்ட கூட்டமல்ல இது. இயற்கையான உணர்வு படைத்தவர்கள் அவரவர்களாகச் சொந்தச் செலவிலே ஏதாவது ஒன்றை அடகு வைத்து வந்து இருப்பார்கள் - எனக்குத் தெரியும். இந்த உணர்வு என்பது அவ்வளவு எளிதிலே வந்து விடாது. அதைக் கண்டு அச்சமாக இருக்கிறது. எப்படி கூட்டம் கூட்டுகிறார்கள். நாம் ஒரு மாநாடு போட வேண்டுமானால் பல இலட்சம் செலவழித்து மக்களைக் கூட்ட வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறார்கள். உணர்வின் அடிப் படையில் நாம் திரட்டுகிறோம். மக்களைத் திரட்டினால்தான் மாற்றம். அதை நாம் செய்ய வேண்டும். உலக மொழியாக நம் மொழி உயர்ந்து இருக்கிற இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள குறிப்பான இனமாகவும் தமிழன் மாற வேண்டும்.

நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும். உலகத்தின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு நம்மால் உதவ முடியும். நாம் வலிவு இல்லாமல் போனால் நம்மையும் காத்துக் கொள்ள முடியாது நம்மைச் சார்ந்து இருக்கிற மற்ற தமிழர்களையும் நாம் காப்பாற்ற முடியாது.

தொடரும்...

Wednesday, September 10, 2008

ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது-பழ.நெடுமாறன்-2

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை
...
இந்த போக்குக்குத் தாய்த் தமிழகத்தின் புறக்கணிப்பு மட்டும் காரணமா? அது ஒரு காரணம். மற்றொன்று முக்கியமானது. இந்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது. இந்திய அரசு நம்முடைய வெளி நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இந்தியாவில் வேறு எந்த தேசிய இனமும் வெளிநாடுகளில் இந்த அளவுக்குப் பெருந்தொகையாக வாழவில்லை.

இலங்கை, மலேசியா, சிங் கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றபோது மலேசியாவுக்கான இந்தியத் தூதுவராக டாக்டர் சுப்பராயன் முதன் முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இன்றுவரை எந்த தமிழனுக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. மேற்கண்ட நாடுகளில் நாம் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வாழ்கிறோம் - பெரும்பான்மையாக இருந்த போதிலும்கூட அவர்களுக்கு என்ன குறை? என்ன தேவை என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்கு மொழி அறியாத இந்தியத் தூதுவர்களால் முடியவில்லை. நேர்மாறான காரியங்களைத்தான் செய்கிறார்கள். இந்திய அரசு அதிலே மட்டும் அலட்சியப் போக்குக் காட்டவில்லை.

கச்சத் தீவைத் தூக்கி இலங்கைக்குத் தாரை வார்த்தார்கள். அதனால் தமிழக மீனவர்கள் அங்கு செல்ல முடியாமல் அல்லற்படுகிறார்கள். ஏறத்தாழ 400 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஒரு போதும் இப்படிப்பட்ட செயலைச் சகித்துக்கொள்ளாது. பதிலடி கொடுக்கும் - எச்சரிக்கை தரும் - இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு வாங்கும். தமிழக மீனவர்கள் சிங்கள வல்லரசால் சுடப்பட்டாலும் ஒரு தம்பிடி கூட நட்டஈடு வாங்கப்படவில்லை. இந்திய அரசு வாங்கவில்லை.

அதுமட்டுமல்ல - இலங்கையிலிருந்து ஈழத்தை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் எந்த ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு - முழுமையாக மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது.

இராசீவ் காந்தி காலத்தில் இந்தியப் படை அனுப்பப்பட்டது. இப்போது படைக்கலன்களை அனுப்புகிறார்கள். நம் தமிழர்களைக் கொல்வதற்குத் தான் ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து அந்த தவறைச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கர்நாடகமும் கேரளமும் வஞ்சிக்கின்றன. தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லும் துணிவு வருகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் இங்கே வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை. துணிவும் இல்லை. எங்கே போய் முடியுமோ இது?

தொடரும்...

Tuesday, September 9, 2008

“யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை”பழ. நெடுமாறன்-1

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது.

உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர்கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத்திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப்பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர்களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் பெருமைப்பட இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாலே பேசிய நண்பர்கள் வெவ்வேறு தலைப்பிலே உங்களுக்குப் பல விஷயங்களை மிக அழுத்தமாகப் பதியவைத்தார்கள். நாம் ஒன்றுபட வேண்டும் - தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எல்லோர் பேச்சிலும் ஒலித்தது. இன்றைக்கு தமிழினம் முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஒருகாலத்தில் பாராண்ட இனமாகவும் - ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளை அடக்கியாண்ட இனமாகவும் - மேற்கே உரோமாபுரி கிழக்கே சீனா வரையிலும் பல நாடுகளுடன் வணிகம் நடத்தி செழுமை அடைந்த இனமாகவும் - நம்முடைய இனம் இருந்தது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் இப்படிப் பல இலக்கியச் செல்வத்தை நிறையப் பெற்ற ஓர் இனமாக நம் இனம் விளங்கி வந்திருக்கிறது. எல்லாம் பழம் பெருமை. ஆனால் இன்றைக்கு நம் தமிழ் உலக அரங்கில் இடம் பெறத்தக்க நிலையை அடைந்திருக்கிறது.

தமிழர்கள் - உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த இனங்களில் ஒன்றாக ஆகி இருக்கிறார்கள். உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழ் வளர்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் ஆங்கிலத்தைத் தமிழ் விஞ்சும் என்னும் நிலை வரும்.

தமிழின் மதிப்பு கூடக்கூட அதற்கேற்றபடி தமிழர்களும் உயர வேண்டும். தமிழர்களின் நிலையும் உயரவேண்டும். தமிழும் தமிழர்களும் இணைந்து உயர்ந்தால் தான் நமக்கு வாழ்வு. ஒன்று உயர்ந்து ஒன்று உயரவில்லை என்றால் நமக்கு வாழ்வில்லை.

உலகம் முழுவதிலும் தமிழர் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதற்கு முன் பேசிய நண்பர்கள் உலகின் பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றியும் ஈழத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றியும் - சொந்த மண்ணில் வாழ முடியாத அகதிகளாக வாழ்கிற புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் பேசினார்கள்.

இப்படி ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் - நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைகளாக உழைப்புச் சுரண்டப்பட்டு அதனால் ஆங்கிலேய வர்க்கம் கொழித்தது - அந்த வர்க்கத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் ரொம்ப முக்கியமானது என்று சொன்னால் 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், அதே போல மொரீசியசு, ரீயூனியன், மற்றும் தென்ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இப்படி பலவற்றிலும் நம் தமிழர்கள் கப்பல் கப்பலாகக் கொண்டு போகப்பட்டார்கள்.

அதிலும் யார் குறிப்பாக வெள்ளையர் விரித்த வலையில் சிக்கியவர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த வலையில் சிக்கினார்கள். அக்கறைச் சீமைக்குப் போனால் நாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி அவர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதி ஒடுக்குமுறைத் தொல்லையிலிருந்து தப்பினால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வெளியேறத் துணிந்தனர்.

மேற்கண்ட நாடுகளில் எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பரவினார்கள். தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை வளம் கொழிக்கச் செய்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா? என்றால் இல்லை. இன்றைக்கும் அந்த நாடுகளில் அவர்கள் வாழ்விற்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் 5-6 தலைமுறைகளாக அன்னிய மண்ணில் வாழ நேர்ந்த காரணத்தினால் அந்த மக்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

தென்ஆப்பிக்காவில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சில ஆயிரம் பேருக்குத் தான் தமிழ் தெரியும். ஆங்கிலம் தாய் மொழி ஆகிவிட்டது. மோரிசியஸ் வாழ் தமிழர்கள் பிரஞ்சு, கிரியோலி போன்றவற்றையும் பேசுகிறார்கள். தாய்த் தமிழகத்தின் அரவணைப்பு இல்லாமல் அவர்கள் எல்லாம் அங்கே மொழியையும், பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் மொழியை இழந்து இன்னும் தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க வேண்டிய அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் தங்கள் மொழியை-பண்பாட்டை- கலை-இசை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். அக்கறையாக இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தாலும் கடின உழைப்பின் காரணமாக ஓரளவிற்கு நல்ல வாழ்க்கையைப் பெற்ற பிறகு திருப்தி அடையவில்லை. மாறாக தங்கள் மொழி - தங்கள் பண்பாடு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் - குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். இன்று அந்த நாடுகளிலே தமிழர்களும் தமிழ்க் குழந்தைகளும் மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் வாழ்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அதே காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் கதி என்ன? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியைக் காக்கவும் பாதுகாத்துத் தீர வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளில் போராடுகிறார்கள். ஆனால் நம்முடைய தாய்த் தமிழகத்திலிருந்து எந்த அரவணைப்பும் இல்லாததனால் மொழியை இழந்து பண்பாட்டை இழந்து எப்படியோ ஆகிவிட்டார்கள். இந்தப் போக்குகளை நாம் எவ்வளவு விரைவில் களைகிறோமோ அந்த அளவுக்கு உலக அரங்கில் தமிழர்கள் உயர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதை நாம் செய்தாக வேண்டும்.

தொடரும்...