Tuesday, December 16, 2008

தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியாவிட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

ஆ. ராசாவுக்குப் பதிலாக உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்'

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா (நன்றி: தினமணி 16.12.2008)

இதென்ன கோயில் பிரசாதமா?

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

தொடரும்...

கருணாநிதியின் புதிய மனுநீதி! - பழ. கருப்பையா
(நன்றி: தினமணி 16.12.2008)

Thursday, December 11, 2008

கொள்கைக்காக பதவியை துறந்தவர் வி.பி.சிங்-திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் படத்திறப்பு விழாவும், வீரவணக்க கூட்டமும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கொள்கைக்காகவே தன்னுடைய பதவியை துறந்தவர். கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் அறிக்கைகளை அமல்படுத்த முயற்சி செய்த போது, அப்போதைய பெரும்பான்மையாக இருந்த பா.ஜ.க, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் வி.பி.சிங் பதவி இழக்க நேரிட்டது.

தன்னுடைய பதவி பறிபோன போதிலும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த போராடியவர் வி.பி.சிங். ராஜவம்சத்தில் பிறந்தவர் வி.பி.சிங். அப்படி ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோரின் கொள்கைகளை படித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடியவர்.

ஜனநாயக கொள்கைகளை நடைமுறைப்படுத்த சிறிது காலம் அரசியலை விட்டே விலகி இருந்தவர். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்டோருக்காக ஜனநாயக முறையில் குரல் கொடுத்தவர் வி.பி.சிங்.

சமூகத்தில் தகதியற்றவர்களாக கருதப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் நீதிக்காக போராடியதால் அவரை சமூகநிதி காவலர் என்று அழைக்கிறோம்.

Thursday, December 4, 2008

சென்னையில் தமிழர்களே வாழவில்லையா?

தகவல் தொழிற்நுட்பமும் இணையதள சேவைகளும் உலகெங்கும் பரவியிருக்கும் இக்காலத்தில் உலகில் உள்ள அனைத்து நிர்வாக அமைப்பு முறைகளும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளன.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியும் அதனுடைய செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுதல், சமூதாயக்கூடங்களை பதிவு செய்தல், விண்ணப்பங்களை பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை இணைதளம் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. http://www.chennaicorporation.gov.in/

மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காத்துக்கிடப்பது இதனால் தவிர்க்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை சென்னை மாநகராட்சி செய்துவருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சியை பாராட்டுகிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனியும் வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழர்களே வாழவில்லையா? என்ற ஐயமும் இதனால் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளுவதற்காக தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியாம் தமிழை புறக்கணிப்பதும் அதுபற்றி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு செயல்படுவதும் வேதனையளிக்கிறது.



சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம், தமிழனின் தலைநகரம், தமிழர்கள்தான் அங்கு வாழ்கிறார்கள், தமிழர்கள்தான் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அந்த மக்களின் மொழியை புறக்கணிப்பதற்கான காரணம் என்ன?

இன்றைக்கு தகவல் தொழிற்நுட்பத்துறையில் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்துவது என்பதும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் கணினி தொடர்புடைய அனைவரும் அறிந்ததே!

தமிழ்நாடு அரசும் பல துறைகளின் சேவைகளை இணையத்தின் வழியாக தமிழ் மொழியிலேயே வழங்கிவருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் வழியாக வழங்கும் செய்தி, தகவல்கள், மாநகராட்சியின் செயல்பாடுகள், இணையவழிச் சேவைகள், துறை செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், மண்டல விவரங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கும் விவரங்கள், படத்தொகுப்பு, அனுமதி பெற்ற நில அளவீட்டாளர்கள் விவரம், மாநகராட்சி திட்டமிடுதல் போன்ற அனைத்து விவரங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

சென்னை மாநகராட்சி என்ற பெயர், ஒரு திருக்குறள், நகர தந்தை (மேயர்) பற்றிய விவரம், நிதிநிலை அறிக்கை, விண்ணப்பங்கள் போன்ற ஒருசில விவரங்கள் மட்டுமே தமிழில் உள்ளன. இவைகளும் நேரடியாக தமிழில் இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட படியிலிருந்து ஒளிபடி (Scanning) எடுத்து இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

சென்ன மாநகராட்சியின் இணையதளம் முழுமையாக தமிழல் இல்லாததற்கு யார் காரணம்?

ஆட்சியாளர்களா? அதிகாரிகளா? தொழிற்நுட்ப வல்லுனர்களா?

சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் மாடியில் “தமிழ் வாழ்க” என்று விளம்பரப் பலகை வைத்துவிட்டால் தமிழ் வாழ்ந்துவிடாது.

இதுபோல தமிழ்நாடு அரசின் பல்வேறு இணையதளங்கள் ஆங்கிலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.


நமது அண்டை நாடான சீனா தன்னுடைய அனைத்து நிர்வாக நடைமுறைகளையும் அந்நாட்டின் சீன மொழி மற்றும் நான்கு உள்ளூர் மொழிகளில் செயல்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி சீன நாட்டின் செயல் திட்டங்களையும், செய்திகளையும், சீன மக்களின் கலை பண்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 48 உலக மொழிகளில் இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று.




அதுமட்டுமின்றி தமிழின் வழியாக சீன மொழியை பயிற்றுவிக்கும் திட்டமும் அதில் உள்ளது. சீனா இன்று உலகம் முழுவதும் மிடுக்கோடு நடைபோடுவதற்கு காரணம் என்னவென்று இப்போதாவது நமது இந்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும்.

சீன மக்கள் தன்னையும் தன் மொழியையும் உணர்ந்து செயல்பட்டு உலகுக்கு தான் யார்? என்று நிறுபித்து தன்மானத்தோடு வாழ்கிறார்கள்.

சீன மொழியைப் போன்று மிகத் தொண்மையான மொழியை உடைய தமிழன் தன்மானத்தோடு உலகில் வெற்றிநடைபோட தமிழ்நாடு அரசு தமிழை அரியணை ஏற்றுமா?

ஆப்பம் பங்கிட கழுகு வந்துள்ளது-எச்சரிக்கை!

மும்பையில் தற்போது நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப்பிறகு இந்தியா-பாகிசுதானுக்கிடையே பஞ்சாயத்து செய்ய அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அதன் தொடர் நடவடிக்கை பற்றி சிறு கண்ணோட்டம்.


முதலில் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கடுங்கண்டனம் தெரிவிக்கிறார்.


வருங்கால அதிபர் பாகிசுதானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழிக்கலாம் என்கிறார்.



அதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து இந்தியாவிற்கு அனுசரணையாக பேசுகிறார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் கூட்டு இராணுவ தளபதி பாகிசுதானின் இராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார்.

பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாகிசுதான் சென்று அந்த நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் கூட்டு இராணுவ தளபதி இங்கே வந்து இங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்கர்கள் பாகிசுதானிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும் இந்தியாவிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் விளங்கவில்லை.

நமது ஊர்களில் நடக்கும் வாரச்சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கும் தரகர்களுக்கு என்ன வருமானம் வருகிறது என்பது விற்பவருக்கும் தெரியாது, வாங்குபவருக்கும் தெரியாது. அது தரகருக்கு மட்டுமே தெரியும். அதுபோல அமெரிக்காவிற்கு கிடைக்கும் பலன் என்னவென்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.



இந்தியாவிற்கும் பாகிசுதானிற்கும் இடையே கனண்று கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையை அமெரிக்கா தற்போது செய்து வருகிறது என்பது ஊரரிந்த இரகசியம்.
இதை இந்தியாவும் பாகிசுதானும் உணர்ந்து தக்க நடவடிக்கை எடுப்பது இரு நாட்டுக்கும் நல்லது. இல்லையென்றால் பூனைகளுக்கு குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதையாகிவிடும். எச்சரிக்கை!