Friday, October 3, 2008

தமிழ்நாட்டில் மருத்துவர் அன்புமணியைப் பாராட்ட யாருக்கும் மனமில்லை!




காந்தியடிகளின் பிறந்த நாளான கடந்த அக்டோபர் 02 அன்று நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி அவர்கள் நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் நடுவண் அரசில் சுகாதாரத்துறை என்ற ஒன்று இருப்பது நாட்டுமக்களுக்கு பரவலாக தெரிந்தது என்பதே உண்மை.

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் “குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ வசதி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அறிவித்தார்.

அதன்படியே பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவரின் நடவடிக்கைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் அவை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கின.

அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த மருத்துவம் என்ற நிலை நாட்டில் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் அதற்கான பணியை தொடங்கியதற்காக அமைச்சர் மருத்துவர் அன்புமணியை அனைவரும் பாராட்ட வேண்டும்.

இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் மருத்துவர் அன்புமணியின் பணியை உலகமே பாராட்டினாலும் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை தவிர்த்து வேறு யாருமே பாராட்டாததுதான்.

அண்மையில் லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்து நாளேடுகளிலும் கொட்டையெழுத்தில் வந்தது. ஒவ்வொரு நாளேடும் ஆய்வின் ஒவ்வொரு கூறுகளையும் அவரவர்களுக்கு ஏற்றவாறு வெளியிட்டன.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 13 நடுவண் அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்ற ஆய்வும் ஆய்வு முடிவும் “தமிழ் ஓசை” நாளிதழ் “மக்கள் தொலைக்காட்சி” தவிர வேறு எந்த ஊடகங்களிலும் துணுக்குச் செய்தியாகக்கூட வெளிவரவில்லை.

காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 நடுவண் அமைச்சர்களில் மிகச்சிறப்பாக செயல்படுவர் மருத்துவர் அன்புமணி என்ற ஆய்வு முடிவுதான்.

ஒரு தமிழன் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்வதை இந்த ஊடகங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? அல்லது ஏற்றுக்கொள்ள மனமில்லையா?

8 comments:

said...

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். தமிழ் நாட்டில் கட்சி சார்பின்றி நடத்தப் படும் பத்திரிக்கைகள் அரசியல் பேசுவதில்லை. அரசியல் பேசும் பத்திரிக்கைகள் கட்சி சார்புடையனவாகவே இருக்கின்றன.

எழுத்தாளர்களிலும் சம கால அரசியலைப் பற்றி கண்டுகொள்ளாத 'ஜெய மோகன்' வகைதான் அதிகம். ஞாநி போன்றவர்கள் குறைவு.

மேலும், பா.ம.க. வின் மீதான 'சாதிக் கட்சி' என்ற அடையாளம் ஒரு காரணமாக இருக்கலாம். அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் ஒட்டு மொத்த தமிழர்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும் போது இந்த முத்திரை சீக்கிரம் அழிக்கப் படவேண்டும். தமிழன் நலனுக்காக செயல் படும் எந்தக் கட்சியும் வளர வேண்டும்.

அமைச்சர் அன்புமணியை நாம் பாராட்டுவோம்.

said...

சாதனையாளர் தமிழராக இருந்தால் ஒவ்வொரு தமிழனும் அவரை பாராட்டவேண்டும்.

தவறுசெய்வது தமிழனாக இருந்தால் அதை கண்டிப்பதும் அவனை திருத்துவது தமிழனாக இருக்கவேண்டும்.

தமிழனை பாராட்டுவதிலோ கண்டிப்பதிலோ தமிழனே முதன்மையானவனாக இருக்கவேண்டும்.

said...

தோழர் கரிகாலன்,
உங்கள் கருத்துடன் முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.

said...

பா.ம.க ஒரு சாதிக் கட்சி என்ற முத்திரை அழுத்தமாக
உள்ளதால் உண்மையை கூட அங்கீகாரம் செய்ய
மறுக்கின்றனர்.

தமிழக ஊடகங்கள் எப்போதும் சார்பு நிலை அரசியலையே
கொள்கையாக வைத்துள்ளனர். அதிலும் ஒரு பிற்படுத்தப்பட்டவன்
பேர் வாங்குவதை அவர்களால் சீரனிக்க முடியாது.
-கடலூர் முகு-

said...

பா.ம.க. ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்சி என்தே ஒரு மூடநம்பிக்கைதான்.

நாட்டில் உள்ள அனைத்து வன்னியர்களும் பா.ம.க.வில் இல்லை.

தமிழ்நாட்டில் பா.ம.க.வில் மட்டும்தான் அனைத்து சமூகத்தினரும் (பார்ப்பனர்களைத் தவிர) கட்சிப் பொறுப்பிற்கு வரும் வகையில் அமைப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

said...

கரிகாலன்,

யார் பாராட்டாடி என்ன ? நம்ப பாராட்டலாம். இந்த சட்டம் கொண்டு வந்ததுக்கு காரணம் அமைச்சர் அன்புமணியின் தீவிர நம்பிக்கை தான்.

*********தமிழ்நாட்டில் பா.ம.க.வில் மட்டும்தான் அனைத்து சமூகத்தினரும் (பார்ப்பனர்களைத் தவிர) கட்சிப் பொறுப்பிற்கு வரும் வகையில் அமைப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.*****

அது என்ன பார்பனரை தவிர ? நீங்க சொல்ற செய்தி உண்மையா ?

Anonymous said...

உண்மைதான். மருத்துவர் இராமதாசு வன்னியர் சங்கம் தொடங்குவதற்கு முன்னர் அவர் ஒரு பெரியார் தொண்டர், பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்.

இன்றும் கோவிலுக்குச் செல்வது சாமி கும்பிடுவது போன்ற பழக்கங்கள் அவருக்கு இல்லை. (அவரது துணைவியார் கோவிலுக்கு செல்வார் மதச்சடங்குகளில் அதிக நம்பிக்கை உள்ளவர்)

பா.ம.க. தொடங்கும் போது அமைப்பு விதிகளை உருவாக்கிய குழுவில் பேராசிரியர் தீரன் (கலைஞர் உபயத்தால் கட்சியிலிருந்து பிரிந்தவர்), தலித் எழில்மலை (செயலலிதா உபயத்தால் கட்சியிலிருந்து பிரிந்தவர்) இவர்களுடன் பல தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள், பெரியார் தொண்டர்கள் போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் படங்களை கட்சியின் உறுப்பினர் அட்டை முதல் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்துவது அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுதான்.

வன்னியர் சங்கத்தின் தொடர் சாலை மறியல் போராட்டம் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்றுதான் தொடங்கப்பட்டது.

சாதி ஒழிப்பு, முற்போக்கு, பகுத்தறிவு என்று பேசிக்கொண்டு அவற்றிற்கு எதிராகவே செயல்படுவோருக்கு நடுவில் சாதி அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து அவர்களை முற்போக்கு பாதையை நோக்கி கொண்டு செல்வது எவ்வளவோ மேல்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் தமிழனால் தமிழர்களுக்காக நடத்தப்படும் அரசியல் கட்சிகள் பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஒருசில அரசியல் கட்சிகளே. (இவர்களிடமும் குறைகள் உள்ளன என்பது வேறு) அந்த வகையில் தமிழன உணர்வாளர்கள் தமிழர் கட்சிகளை ஆதரிக்கவேண்டும்.

said...

கண்டிப்பாக அன்புமணி அவர்களை பாராட்டுவோம்.........தமிழ்நாட்டில் அவருடைய திறமையை அங்கீகரிக்க சாதி ஒரு தடையாய் இருக்கு........மீரிப்பேசுபவர்களுக்கு சாதிமுத்திரை குத்தப்படுகின்றது........