Monday, September 1, 2008

யாருக்காக இந்த நில உச்சவரம்பு சலுகை?

சென்னை, ஆக. 31: தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வரன்முறைப்படுத்தி கிரையம் பெற்றவர்களுக்கே அளிப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளும்கட்சியினர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நில உரிமை காரணமாக சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை போக்கவும், நிலச் சுவான்தார்களிடம் முடங்கிக்கிடக்கும் ஏராளமான நிலங்களை விவசாயிகள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு பிரித்தளிக்கவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டம் (உச்சவரம்பு நிர்ணயத்துக்காக) கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், 1960-களின் பிற்பகுதியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சட்டத்தில் 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உச்சவரம்புக்குட்பட்டு அனுமதிக்கப்படும் நிலத்தின் அளவு குறைக்கப்பட்டது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு நிலச்சுவான்தார்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில், மத்திய அரசின் 1976-ம் ஆண்டு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தை பின்பற்றி 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முன்தேதியிட்டு 1976-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் 2,381 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 109 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

அரசின் கொள்கை விளக்க குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 343 ஹெக்டேர் நிலம் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 55 ஹெக்டேர் நிலங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் உள்ளன.

538 ஹெக்டேர் நிலம் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1,336 ஹெக்டேர் நிலம் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக வைக்கப்பட்டன.

1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில், 1978-ம் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 1266.68 ஹெக்டேர் நிலம் அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்கப்பட்டன.

அமைச்சரவை முடிவு: சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்டு மேல் மிகை வெற்று நிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலங்களை கிரையம் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வரன்முறை செய்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாருக்காக? உச்சவரம்பு சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கிரையம் செய்யப்பட்டுள்ளது என அரசு கூறியுள்ளது. இவ்வாறு கிரையம் பெறுவது செல்லாது என்றும் அப்படி கிரையம் பெற்றவர் அதில் உரிமை கோர முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் 2000-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள கிரையங்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் தற்போதைய முடிவு உள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக யார், யார் அரசு நிலத்தை கிரையம் செய்தார்கள் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை உரியவர்களுக்கு ஒதுக்க வேண்டிய அரசு கிரையத்தை அங்கீகரிப்பது ஏன்?

இந்த நிலங்களை தெரியாமல் வாங்கி அதில் வீடு கட்டி குடியிருக்கும் நடுத்தர மக்களின் நலன் கருதி முடிவெடுப்பதாக கூறுவதென்றால், ஒன்றரை கிரவுண்டு வரையிலான நிலங்களை மட்டும் மதிப்புத் தொகை கூட வாங்காமல் வரன்முறை செய்து தரலாம்.

நிலத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நகர்ப்புறத்தில் நடுத்தர மக்கள் அரை கிரவுண்டு நிலத்தை கூட வாங்க முடியாத நிலையில் ஒன்றரை கிரவுண்டு நிலம் வைத்திருப்பவர்களை நடுத்தர பிரிவு மக்களாக அரசு கருதுவது வியப்பாக உள்ளது.

ஒன்றரை கிரவுண்டுக்கு மேல் மூன்று கிரவுண்டு வரையும் அதற்கு மேலும் பரப்பளவு கொண்ட (அரசு கையகப்படுத்தி வைத்துள்ள) நிலங்களை பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களே கிரையம் செய்து வைத்திருக்கின்றனர்.

இதனால், நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிராக நடப்பவர்களை, அங்கீகரித்து அந்த நிலங்களை அவர்களுக்கே வரன்முறைப்படுத்தி அளிக்க வேண்டிய அவசர அவசியம் என்ன என்பதே அனைத்து தரப்பினரிடம் தற்போது எழுந்துள்ள கேள்வி.

அரசியல் பின்னணி கொண்ட பலர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை, தொழிற்சாலை உள்ளிட்டவை பெயரில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்களுக்கே அளிப்பதற்காகவே அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்களை ஏழைகளின் நலனுக்காக என்று கூறி வரன்முறைபடுத்திய விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அடுத்த வரன்முறை தேவையா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

நன்றி: தினமணி 01.09.2008

0 comments: